கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (42) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தீபா (32), இவரகள் இருவருக்கும் திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது, மேலும் 8 வயதில் சஞ்சீவி என்ற மகனும், 5 வயதில் சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். ஆனந்துக்கு வெகு நாட்களாகவே குடி பழக்கம் உள்ளது. இதன் காரணமாக தினமும் இரவு குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. 



 

இந்த நிலையில் நேற்று இரவு இதே போல கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த் உருட்டு கட்டையால் தீபாவை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த தீபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி இறந்தது தெரியாமல் குடி போதையில் இரத்த வெள்ளத்தில் இருந்த அவரது உடல் அருகிலேயே ஆனந்தும் படுத்து தூங்கி உள்ளார். பின்னர் மறு நாள் காலை அருகில் இருந்தவர்கள் ஆனந்த் வீடு திறக்காமல் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்தனர். 



 

பின்னர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, ரத்த காயங்களுடன் தீபா பிணமாக கிடப்பதையும், அருகில் ஆனந்த் தூங்கிகொண்டு இருந்ததையும் பார்த்து, அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து அண்ணாமலைநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடி போதையில் கணவனே மனைவியை அடித்து கொன்று, கொன்றது கூட தெரியாமல் அருகிலேயே படுத்து உறங்கிய இந்த சம்பவம் சுற்று வட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

இவ்வாறு குடி போதைக்கு அடிமை ஆகி பலரும், செய்வது தவறு என்று கூட தெரியாமல் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். குடி பழக்கத்தை குறைக்காத காரணத்தினால் மனைவியையும் கொன்று, தானும் சிறைக்கு சென்று இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கி சென்று உள்ளார். இனி வரும் காலங்களில் குடி பழக்கத்தினை குறைக்க மக்கள் அரசு சார்ந்த அல்லது தனியார் மையத்தினை அணுகி பழக்கத்தினை குறைத்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.