விழுப்புரம்: திண்டிவனம் அருகே கோனேரிகுப்பத்தில் இன்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 86வது பிறந்தநாளையொட்டி நிறுவனர் நாள் விழா, மரக்கன்று நடும் விழா, பாவரங்கம் என முப்பெரும்விழா பாமக கௌரவத்தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்றது. முதலில் வன்னியர் சங்கத்தலைவர் மறைந்த குரு சிலை அருகே 86  மரக்கன்றுகளை மருத்துவர் ராமதாஸ் நட்டுவைத்தார்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது, அறத்தில் சிறந்தது மரம் நடுவது. அந்தவகையில் இந்நாளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இங்கு 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். பசுமையான சூழலே நிலவ வேண்டும். விரைவில் இக்கல்வி கோயில் நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என்றார். அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.


இதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் வாழ்த்துரை வழங்கி அவர் பேசியதாவது: என்னோடு இணைபிரியாத, நான் இங்கு வரவில்லை என்று வருத்தப்படும், வந்துபோன பின் மகிழ்கின்ற மரம், செடி கொடிகளுக்கு வாழ்த்துகள். கடந்த ஆண்டு 16 வகையான 7770 மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவர்களாகிய நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கே செல்வம். நிச்சயமாக நீங்கள் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். கேரளாவில் ஈழவர்கள் என்ற சாதியினர் மேலாடை போடக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தபோது ஆதி நாராயணகுரு என்பவர் முன்னாள் குடியரசுத்தலைவர் வெங்கட் ராமனை சந்தித்து மனு கொடுத்தபோது அவர் உபியில் உள்ள மக்களைப்பற்றி குறிப்பிட்டார். மத்திய அரசின் உயர் பதவியில் உள்ளவர்கள் வண்டி ஓட்டுகிறார்கள் என்று சொல்லும்போது அந்த சாதியிலிருந்து 4 முதல்வர் உருவாகியுள்ளனர். ஆனால் இங்கு குறையில்லாமல் குடிக்கவைக்கிறார்கள். அவர்களை மீட்க முடியாமல் தவிக்கும் நான்.


முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து 35 நிமிடம் பேசினேன். இந்த ஊமை ஜனங்களுக்கு உங்களை விட்டால் தற்போது யார் செய்யப் போகிறார்கள்.


ஆனால் இந்த ஊமை ஜனங்கள் இன்னும் இரண்டு மாதத்தில் பேசப் போகிறார்கள். இந்த ஊமை ஜனங்கள் நாடே கிடுகிடுக்க, நாடே ஸ்தம்பிக்க,  ஊமை ஜனங்களாக இருந்தவர்களுக்கு இவ்வளவு தைரியம் துணிச்சல் எப்படி வந்தது என்று மற்றவர்கள் பேசும் அளவிற்கு ஆட்சியில் இருப்பவர்களுடைய புடை சாய! போதுமடா சாமி என்று ஓட.. இந்த ஊமை ஜனங்களுக்கு தைரியம் வர அவர்கள் பேசப் போகிறார்கள் இந்த நாடு அதனை பார்க்க போகிறது இந்த நாடு தாங்காது.


உங்க அப்பா வீட்டு சொத்தையா  நாங்க கேட்கிறோம் 10.5. இது எங்க நாடு, இது எங்க பூமி, இது எங்களால் வளர்ந்தது, இது எங்கள் மண், உனக்கு இங்க என்ன வேலை.. உன்கிட்ட போய் நான் 10.5 கேட்கணுமா... எனக்கு அவமானமா இருக்கு, உன்னை கோட்டையில் சந்திக்க வேண்டுமா  எனக்கு அவமானமா இருக்கு, சாதி இவரை கணக்கெடுப்பு உன்கிட்ட கேட்டா நீ மத்திய அரசை காட்டுற அதுக்கு எதுக்கு நீங்க முதலமைச்சர்... ஏதோ நடக்க போகுது நடத்தி காட்ட போறோம் அண்டம் கிடுகிடுங்க நடக்கப் போகிறது. இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் பேசினார்