விழுப்புரம் : விழுப்புரத்தில் பொற்கொல்லர் வீட்டில் மூன்றாவது முறையாக கார் மற்றும் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.


விழுப்புரம் அருகேயுள்ள சானாந்தோப்பில் பொற்கொல்லர் குமரன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வாயிலில் கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனத்தினை நிறுத்திவிட்டு இவரது குடும்பத்தினர்கள் உறங்க சென்றுள்ளனர். நள்ளிரவு இரண்டு மணி அளவில் வீட்டில் வாயிலில் அதிக சத்தத்துடன், வெளிச்சத்துடன் தீ கொழுந்துவிட்டு எரிவதை கண்டு குமரன் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது வாயிலில் நிறுத்தபட்டிருந்த கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனம் முழுமையாக தீ பற்றி கொழுந்துவிட்டு எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து அனைக்க முயற்சி செய்துள்ளார்.


காரும் இருசக்கர வாகனமும் முழுமையாக எரிந்ததால் வீட்டிலிருந்த நீரை ஊற்றி அனைத்துள்ளனர். இருப்பினும் தீயானது முழுவதுமாக பரவி காரும் இரண்டு இருசக்கர வாகனமும் எரிந்து சேதமாகின. கார் இரண்டு இரு சக்கர வாகனம் எரிந்தது குறித்து தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரனை செய்தனர்.


போலீசாரின் விசாரனையில் மர்ம நபர்கள் இரவு சிசிடிவி கேமராவின் ஒயர்களை கட் செய்துவிட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்துள்ளது. பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவமானது அவரது வீட்டிலையே மூன்றாவது முறையாக நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. மூன்றாவது முறையாக நடைபெற்றும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.