பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் சூடு மண்ணளான விநாயகர் சிற்ப பொம்மையை பார்த்த கிராம மக்கள் பண்ருட்டி தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் மோகன கண்ணன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். 

 

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தெரிவிக்கும் போது. எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் சுடுமண்ணாலான விநாயகர் சிற்ப பொம்மை கண்டறியப்பட்டது. இந்த விநாயகர் சிற்பத்தின் உயரம் 15 செ.மீ, அகலம் 7 செ.மீ எனவும், சுடுமண் விநாயகர் பொம்மை இரண்டு கரங்களுடன் காணப்படுகிறது, தலையில் கரண்ட மகுடமும், இரு காதுகளிலும் ஓட்டையும், துதிக்கை நீண்டும் உள்ளது, இரு கைகளில் உள்ள தோள்களிலும் காப்பு அணிந்துள்ளார், விநாயகர் குழந்தையைப் போன்று பீடத்தின் மீது அமர்ந்துள்ளார்.

 

இதற்கு முன்பு பண்ருட்டி பகுதி தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் சுடுமண்ணாலான உருவ பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் சுடுமண்ணாலான தெய்வ உருவ பொம்மை கிடைத்தது இதுவே முதல் முறையாகும்.

 

 சுடுமண் விநாயகரின் சிற்ப அமைப்பை பார்க்கும் போது இது சோழர்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றார்.மேலும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்காரணமாக மண்ணுக்கடியில் இருந்து இச்சுடுமண் சிற்பம் வெளியே வந்திருக்கலாம் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தெரிவித்தார்.