என்எல்சி சுரங்கங்களுக்கு நில எடுப்பால் பாதித்த கிராமங்களின் நில உரிமையாளர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.

Continues below advertisement


மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:


என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கம்-1, சுரங்கம்-1ஏ, சுரங்கம்-2 ஆகிய சுரங்கங்களுக்கு தேவைப்படும் நிலங்கள் குறித்து அரசால் ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான வேலைவாய்ப்பு மற்றும் இழப்பீடு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சிகளை அடுத்து சட்டமன்ற உறுப்பினர்களின் முன்னிலையில் அமைச்சர்களின் தலைமையில் நில எடுப்பால் பாதித்த கிராமங்களின் நில உரிமையாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடத்தி மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு என்எல்சி இந்தியா நிறுவனம் நிலஎடுப்பால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், வேலைவாய்ப்பு பெற பயிற்சிகள் அளிக்கவும், உயர் இழப்பீடு வழங்கவும் முன்வந்துள்ளது.




மேலும், வேலையில் சேரவிரும்பாதவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.7000/- முதல் ரூ.10,000/- வரை (மூன்றுபிரிவுகளில்) 20 வருடங்களுக்கு, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ரூ.500/- உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாதாந்திர உதவித்தொகை பெற விரும்பாதவர்களுக்கு வேலைக்கு பதிலாக, ஒருமுறை வழங்கப்படும் வாழ்வாதாரத் தொகை ரூ.10.00 இலட்சம் முதல் ரூ.15.00 இலட்சம் வரை மூன்று பிரிவுகளில் வழங்கப்படும். மக்கள் இந்த வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலை வாய்ப்பு மற்றும் இதர பலன்களை தன் விருப்பத்திற்கேற்ப பெற விழைவோர் உரிய விண்ணப்ப படிவங்களை மாவட்ட வருவாய் அலுவலர் (NLC நிலஎடுப்பு) நெய்வேலி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். நிலத்திற்கான உரிய பணபலன்களைப் பெற்று நிலத்தை ஒப்படைத்தபின் வேலை வாய்ப்பானது முதுநிலை வரிசை (Seniority) அடிப்படையில் கணக்கிடப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படவுள்ளதால் நில எடுப்பால் பாதிக்கப்படும் மக்கள் சிறந்த முறையில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விரைவில் மாவட்ட வருவாய் அலுவலர் (NLC நிலஎடுப்பு) நெய்வேலி அவர்களிடம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு கூறியுள்ளார்.