புதுச்சேரியின் பிராந்தியமான மாஹே கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் ( Nipah Virus ) அதிகம் பாதித்த கோழிக்கோடு மாவட்டம் அருகே உள்ளது. ஆகவே அங்கிருந்து புதுச்சேரி மாநிலம் மாஹே பிராந்தியத்திற்கு நிபா வைரஸ் ( Nipah Virus ) பரவ வாய்ப்புள்ளது என்பதால் புதுச்சேரி அரசு  எல்லைகளை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. இதனிடையே மாஹே பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்.


கைகளை கழுவ வேண்டும், சானிடரைஸ் பயன்படுத்த வேண்டும், வகுப்பறைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை புதுச்சேரி அரசின் அறிவுறுத்தலின் பேரில் பிராந்தியத்திய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாஹே பிராந்தியத்தில் நிலைமைகளை உன்னிப்பாக கண்காணிக்க  வேண்டும் என்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் துணை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். மாஹே பிராந்தியத்திற்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், நிபா வைரஸ் ( Nipah Virus ) பரவல் எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் மாஹே பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் வரும் 17-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




Nipah Virus Symptoms: இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் தலைவலி, காய்ச்சல், குமட்டல், தலைசுற்றல், சோர்வு, மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். இந்த வைரசின் ஆரம்ப நிலையில் மூச்சுத்திணறல் ஏற்படும். நிபா வைரஸின் அறிகுறிகள் 7 முதல் 10 நாட்கள் வரை நீடிக்கும். 


Nipah Virus Treatment: நிபா வைரஸ் பாதிப்பிற்கு என்று இதுவரை பிரத்யேகமாக எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை மட்டுமின்றி மனத் தேற்றலின் மூலமாகவே அவர்களை குணப்படுத்த முடியும். மேலும், நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முகமூடி, கையுறை போன்ற முன்னெச்சரிக்கை உபகரணங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடைகள், படுக்கைகள், போர்வைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.


அறிவுரைகள்: நிபா வைரஸ் என்பது ஒருவரிடம் இருந்து ஒருவரிடம் தொடுதல் மூலமாக எளிதில் பரவக்கூடிய அபாயங்கள் இருப்பதால், நிபா வைரசால் உயிரிழந்தவர்களின் முகங்களை கட்டாயம் மறைக்க வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நிபா வைரசினால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு முன்பு குளிப்பாட்டும் போதும் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசிகளும், பிரத்யேக மருந்தும் இதுவரை கண்டுபிடிக்காமல் இருப்பதால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.


நோயாளியிடம் இருந்து இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை நன்றாக சோப்புகளால் அடிக்கடி சுத்தம் செய்வது மிகவும் அவசியம். இந்த வைரசை மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள சளி மாதிரிகளில் இருந்தும், ரத்தம் மற்றும் சிறுநீரில் இருந்தும் மேற்கொள்ளப்படும் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்படும்.