விழுப்புரம் : வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த வருடம் அதிகளவில் ஆர்டர்கள் குவிந்ததால் விழுப்புரத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு காகித கூழ் வினாயகர் சிலைகள் அனுப்பும் பணியில் சிலை தயாரிப்பாளர்கள்  ஈடுபட்டுள்ளனர். வினாயகர் சதுர்த்திக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.


விநாயகர் சதுர்த்தி விழா


இந்துகளின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 18ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாட்டின் அனைத்து நகரம் மற்றும் கிராமங்களிலும் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட உள்ளனர். இதையொட்டி கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.




விழுப்புரம் மாவட்டத்தில் சிலை தயாரிப்பு 


அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஓமிப்போர், கிளப்பாக்கம், மற்றும் அய்யூர் அகரம், அய்யங்கோவில்பட்டு, சிந்தாமணி, வளவனூர், திருவாமாத்தூர், பனையபுரம், மடப்பட்டு உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


சிங்கத்தின் மீது விநாயகர், சிவன், பார்வதியுடன் இருப்பது போன்ற விநாயகர், 3 தலையுடன் இருக்கும் விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர், மாட்டு வண்டிகளில் அமர்ந்தபடி செல்வது போன்ற விநாயகர், ஐந்துமுக சிங்க விநாயகர், நந்தி விநாயகர், மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வது போன்ற விநாயகர், வலம்புரி விநாயகர், குபேந்திரருடன் இருக்கும் விநாயகர், 5 தலை நாகத்துடன் இருக்கும் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் 2 அடி முதல் 13 அடி உயரம் வரை விதவிதமான வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.


சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் சிலை தயாரிப்பு 


இதுகுறித்து சிலை தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும், ரசாயன பொருட்களை கலக்காமலும், நீர் நிலைகளில் கரையும் தன்மையுள்ள சிலைகளை தயாரித்து வர்ணம் பூசி வருகிறோம். விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் சிலைகள் கேட்டு ஆர்டர் கொடுத்து வருகின்றனர் எனவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை சற்று அதிகரிக்க கூடும் என தெரிவித்தார்.




சிலை தயாரிப்பாளர் அருணாச்சலம் கூறியதாவது:-


வினாயகர் சதுர்த்தி விழாவிற்காக மூன்றாண்டுகளுக்கு பிறகு அதிகளவில் வினாயகர் சிலைக்கு ஆர்டர்கள் பெறப்பட்டு கர்நாடகா, கேரளா, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற பகுதிகளுக்கு அனுப்பட்டு வருவதாக சிலை தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிலை வேண்டி ஆர்டர் கொடுப்பவர்களுக்கே சிலை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகளவில் ஆர்டர்கள் வருவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.