மிக்ஜாம் புயல் எதிரொலியால் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலைகள் வெறிச்சோடின.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் இன்று காலை வரை மட்டும் மரக்காணத்தில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த கன மழை காரணமாக மரக்காணம் மற்றும் சுற்று தொடர்ப பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகிறது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.


மேலும் மரக்காணத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கிழக்கு கடற்கரை சாலை மிக்ஜாம் புயல் எதிரொலியால் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால் சென்னைக்கு செல்வோர் பெரும் அவதி அடைந்தனர். நீண்ட வருடங்களுக்கு பின்பு கிழக்கு கடற்கரை சாலை மிக்ஜாம் புயலால் வெறிச்சோடியது என்பது என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை:


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த ஞாயிறு இரவு தொடங்கி நேற்று இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் மாநகரின் செயல்பாடு என்பதே பெரும்பாலும் ஸ்தம்பித்துள்ளது.


முக்கிய சாலைகளில் மோட்டார்கள் கொண்டு தேங்கியிருக்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும், பல உட்புற பகுதிகளில் மழைநீர் எளிதில் வடிவதற்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும் வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது.


பொதுமக்கள் செய்யக்கூடாதவை..!


தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அநாவசியமாக வெளியே வரக்கூடாது.


அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்லும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


தண்ணீரில் தேள், பாம்பு போன்றவை இருக்கலாம் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்.


செருப்பு அணியாமல் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நடக்க வேண்டாம்.


டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதயாக இருக்க வேண்டியது அவசியம்.


செல்போன் போன்ற மின்சார சாதனங்களை தேவைக்கேற்ப பயன்படுத்துங்கள்.


இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள், முதலில் சாலையில் இருக்கும் தண்ணீரில் வாகனத்தை செலுத்த முடியுமா என்பதை சிந்தித்து செயல்படுங்கள்.


வாகன ஓட்டிகள் நன்கு பாதை நன்கு தெரிந்த பகுதிகளில் மட்டும் பயணிக்கவும்.


தண்ணீரில் முழுவதுமாக மூழ்கியுள்ள பாதைகளில் வாகனம் ஓட்டுவதை தவிருங்கள்.


புதிய பகுதிகளுக்கு வாகனத்தில் சென்று அநாவசியமாக சிக்கலை எதிர்கொள்ள வேண்டாம்.


தண்ணீர் தேங்கிய பகுதிகளில் வாகனத்தை மெதுவாக செலுத்துவதன் மூலம், சாலையோரம் நடந்து செல்பவர்கள் மீது தண்ணீர் அடிக்கப்படுவதை தவிர்க்கலாம்.