சுருக்கு வலை, அதிக குதிரை திறன்கொண்ட விசைப்படகுகளை தடை செய்ய‌ வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 2000 மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தமிழகத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை, இரட்டை மடி வலை மற்றும் அதிக குதிரை திறன்கொண்ட இன்ஜின் படகுகள் பயன்பாட்டில் உள்ளதை தடை செய்யக்கோரி மீனவ கிராம மக்கள் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.  கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 65 மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 2000 மீனவ மக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குப் பெற்றுள்ளனர். 

 

மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாக தடை செய்யப்பட்ட வலைகள் இன்ஜின்களை பயன்படுத்தும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட வலைகளால் கடல் வளம் முழுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதனால் நாட்டு படகுகளை கொண்டு மீன் பிடிக்கும் நடுத்தர மீனவ குடும்பங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் போராட்டத்தின்‌ மூலமாக கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் போராட்டத்தை அலட்சியப்படுத்தினால் இதைவிட மிகப்பெரிய போராட்டம் என்பது நடைபெறும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 



 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என குடும்பத்துடன் பங்கேற்றனர். ஆர்பாட்டத்தில் பாதுகாப்பு கருதி சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் 250 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுருக்கு வலை பயன்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட சட்டத்தை தைரியமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு அரசியல் பின்புலமும், அரசாங்க அதிகாரிகள் பின்புலமாக இருப்பதால் தான் இவ்வாறு தடையை மீறி செயல்பட்டு வருகின்றனர். இதற்கு அரசாங்கம் போர்கால அடிப்படையில் உடனடியாக தடைவிதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை இயக்குனரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவ கிராம‌ மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதனிடையே இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் எச்சரிக்கை செய்யும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் அரசாணை படி சுருக்குமடி வலை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை சில மீனவர்கள் பயன்படுத்துவதாக தகவல்கள் வருகின்றன. அரசால் தடைசெய்யப்பட்ட இந்த சுருக்குமடி வலை பயன்பாட்டை உடனடியாக நிறுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

 

கடலூர் மாவட்ட மீனவர்கள் வாழ்வாதாரம், சிறுதொழில் மீனவர்களின் வாழ்வாதரத்தை நிலைப்படுத்திடவும், நீடித்த நிலையான கடல் வளத்தை பாதுகாக்கவும், ஒட்டுமொத்த மீனவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திடும் வகையில் மீனவர்கள் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். இதனை மீறி தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் சட்டத்தின்படி சுருக்குமடி பயன்படுத்தும் படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும். மேலும், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும்," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.