சுருக்குமடி வலை பிரச்சினையில் பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்தார்.


கடலூரில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரைகோரி, சிங்கார தோப்பு, உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து தினந்தோறும்,100க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக, தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், கடலூர் துறைமுகம் சோனங்குப்பம் பகுதி மீனவர்களுக்கும் பிரச்சனை இருந்து வந்தது. 





இதுதொடர்பாக கடந்த 14.5.2018 அன்று இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் கடலூர் சோனங்குப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரான மீனவர் பஞ்சநாதன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில், 20 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.



 

இந்த வழக்கு விசாரணை கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 பேரில் ஆறுமுகம், கந்தன், சுரேந்தரா, ஓசைமணி, சரண்ராஜ் சுதாகர், சுப்ரமணி, தென்னரசு, ஸ்டாலின், முத்துகுமார் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டு 10 பேருக்கும்  ஆயுள்தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மீதமுள்ள 10 பேரையும் விடுதலை செய்தார்.

 

இதனை அடுத்து தண்டனை பெற்றவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நீதிமன்றத்தின் முன் முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற வாயிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்க வஜ்ர வாகனமும் நீதிமன்றமும் நிறுத்தப்பட்டுள்ளது.

 

தீர்ப்பின் காரணமாக தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் பகுதியில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க, கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவின் பேரில் 300க்கும் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த போலீசார் இரண்டு மீனவ கிராமங்களிலும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரண்டு மீனவ கிராமங்களிலும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.