விழுப்புரம்: திண்டிவனத்தில் போதையில் மனைவியை கொடுமைபடுத்திய கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


உடல் கருகி உயிரிழந்த கணவன்:


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.வி.நகரில் வசித்து வருபவர் தட்சணாமூர்த்தியின் முதல் மனைவியின் மகன் சேது(எ) சேதுபதி (23) இவர் புதுச்சேரியில் உள்ள பஞ்சர் கடையில் பணிபுரிந்து வருகின்றார். இவரும் அதே பகுதயை சேர்ந்த முருகவேணி (19) என்கின்ற பெண்ணுடன்  காதலித்து திருமணம் செய்து கொண்டு தனியே வசித்து வந்தனர். திருமணமாகி 20 நாட்கள் மட்டுமே முடிந்த நிலையில்  01.08.2019ம் தேதி  வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய சேதுபதி வீட்டினுள் படுத்திருந்தத போது குடிசை வீ்ட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் உடல்கருகி சேதுபதி உயிரிழந்தார்.


இத்தகவல் அறிந்து வந்த திண்டிவனம் தீயணைப்புதுறையினர், சம்பவ இடத்திற்க்கு வருவதற்குள் சேதுபதியின் வீடு முற்றிலும் எரிந்து சேதமானது. இதில் உடல்கருகிய நிலையில் சேதுபதியி்ன் உடல் மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய திண்டிவனம் போலீஸார்  பிரேத பரிசோதனைக்காக  சேதுபதியின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


உயிரோடு எரித்த மனைவி:


இது குறித்து தட்சணாமூர்த்தியின் 2வது மனைவி மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சேதுபதியின் வீடு தீப்பிடித்து எரிந்த போது வீட்டின் கதவு வெளிப்பக்கமாக தாழ்ப்பாள்  போட்டு மூடப்பட்டிருந்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.


இதனை தொடர்ந்து சேதுபதியின் மனைவி முருகவேணியிடம் விசாரணை மேற்கொண்டபோது, போதைக்கு அடிமையான சேதுபதி தன் மனைவி முருகவேணியை பலவிதத்தில் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் முருகவேணி  போதையில் படுத்து இருந்த சேதுபதிமீது மண்ணெண்ணை  ஊற்றி தீவைத்து வீட்டுக்கு வெளியே வந்து கதவை வெளிபக்கமாக பூட்டியது  தெரியவந்தது . இதையடுத்து முருகவேணியை போலீஸார் கைது செய்தனர்.


ஆயுள்தண்டனை:


இவ்வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. விசாரணைகள் முடிந்த நிலையில் நீதிபதி ரகுமான் முருகவேணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.  இதனை தொடர்ந்து போலீஸார் கடலூர் மத்திய சிறைக்கு முருகவேணியை அழைத்து சென்று அடைத்தனர்.