55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் நிலவுகின்ற கீழ் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கை கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

 

இந்த நிலையில் கடலூர் மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு ஒரு எச்சரிக்கையானது நேற்று இரவு விடப்பட்டது. வங்க கடலில் மோசமான வானிலை நிலவும் எனவும் மற்றும் கடல் காற்றானது 55 கி.மீ வேகத்தில் வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் 09.11.2022 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாதென அறிவுறுத்தப்படுகிறது.

 

மேலும் ஏற்கனவே கடலில் உள்ள தங்கு கடல் படகுகள் அருகாமையில் உள்ள துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக கரைதிரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். 

 

மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மீன்வளத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வந்தும் கூட சிலர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.