ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைக் கேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமாரக்குடியை சேர்ந்தவர் ராஜதுரை (70), விவசாயி. இவர் காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்திற்கு மனு அளிப்பதற்காக வந்திருந்தார்.மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகில் மனு எழுதிவிட்டு, அதனை நகல் எடுப்பதற்காக சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். 

 

கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விவசாயி ராஜதுரையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜதுரை இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

 

அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைக் கேட்பு கூட்டத்தில் உயிரிழந்த விவசாயி ராஜதுரை ஆத்மா சாந்தியடைய‌ விவசாயிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம், மற்றும் வேளாண்துறை அதிகாரிகள், மற்றும் விவசாயிகள் குறைக்க கூட்டத்தில் பங்கெடுத்த கடலூர் மாவட்ட விவசாயிகள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

 

தொடர்ந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த விவசாயி ராஜதுரை உடலுக்கு கடலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் (பொறுப்பு), மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ரவீந்திரன், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.