விழுப்புரம்: விழுப்புரம் அருகே வளவனூரில் வீட்டில் தனியாக வசித்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களான கணவன், மனைவி இருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.


விழுப்புரம் அருகே வளவனூர் கே.எம்.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 68), இவரது மனைவி உமாதேவி (61). இருவரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களின் மகன், மகள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். ராஜன், உமாதேவி தம்பதியினர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. இவர்களை தேடி அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்றனர். அப்போது ராஜன், உமாதேவி ஆகியோர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.


போலீசார் விசாரணை 


இதுகுறித்து தகவல் அறிந்த வளவனூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மர்மமான முறையில் இறந்து கிடந்தவர்களின் உடலில் காயங்கள் ஏதுமில்லை. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதில் இவர்களுக்கு சொந்தமான நகைகள், பணம் அனைத்தும் வங்கி லாக்கரிலும், கணக்கிலும் உள்ளது எனத் தெரியவந்தது.


மேலும், குடும்ப செலவுக்கு தேவையான பணத்தை மட்டும் வங்கியில் இருந்து எடுத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அதேநேரத்தில் இவர்களது வீட்டில் வாடகைக்கு இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த நபர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியிடமிருந்து ரூ.21 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனை திருப்பி அளிக்காத அந்த நபர் தலைமறைவாகியுள்ளார் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் தம்பதியினர் தாங்களாகவே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என மருத்துவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.


அதே நேரத்தில் பிரேதபரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உறுதியாக கூற முடியுமென மருத்துவர்கள் கூறினர். இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த ராஜன், உமாதேவி தம்பதியினரை பணத்திற்காக யாரேனும் கொலை செய்து, தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்ற கோணத்திலும், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட பகையால் கூட கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற மற்றொரு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.


கடன் கேட்டு தரமறுத்த தம்பதியை கொலை செய்த கொடூரன்


விசாரனையில் ஓய்வு பெற்ற வயதான தம்பதியினர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் பணத்திற்காக யாராவது தனிமையில் வசிக்கும் வயதான தம்பதியினரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரனை செய்தனர். அப்போது வயதான தம்பதியினருக்கு 19 ஆம் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளின் படி விசாரனை செய்ததில் வளவனூரை சேர்ந்த புருஷோத்தமன் என்ற இளைஞர் கடன் பிரச்சனையால் ராஜனிடம் பணம் கேட்டபோது ராஜன் தர மறுத்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த புருஷோத்தமன் வயதான தம்பதி தனிமையில் இருப்பதை பயன்படுத்தி கொண்டு கடந்த 19 ஆம் தேதி வயதான தம்பதியின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டபோது தரமறுத்ததால் இருவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு வயதான தம்பதியின் செல்போனை சுவிட் ஆப் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றது தெரியவந்தது. இருவரை கொலை செய்து விட்டு புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த புருஷோத்தமனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து குற்றவாளிடமிருந்த 20 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். கடன் கேட்டு தரமறுத்ததால் தனிமையில் வசித்து வந்த வயதான தம்பதியை இளைஞர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.