நாடு முழுவதும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷனை பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினருக்கும் விசிகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷனை பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக, மதிமுக, விசிக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்த  விசிக மாவட்ட நிர்வாகி சக்திவேல் மற்றும் 50க்கும் மேற்பட்ட விசிகாவினர் காத்திருந்தனர். அப்பொழுது அங்கு கூடியிருந்த விசிகவினர், பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், விழுப்புரம்  மாவட்ட பாஜக தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கூடியிருந்த பாஜகவினர் விசிகவினர் போலிஸ் கண்முன்னே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அந்த இடமே போர்க்களம் போல மாறியது. பின்னர் அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உரிய நேரம் ஒதுக்கப்படும், அப்போது வந்து மரியாதை செலுத்திக்கொள்ளுங்கள் என சமரசம் செய்து அனுப்பிவைத்தனர்.


மீண்டும் பாஜகவினரும், விசிகவினரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். இரு தரப்பினரையும் போலீசார் குண்டு கட்டாக தூக்கி அங்கிருந்து வெளியேறினார். அரை மணி நேரம் பேச்சுவார்த்துக்கு பின்பு மீண்டும் பாஜகவினர் கட்சி கொடி மற்றும் கட்சித் துண்டு இல்லாமல் மாலை அணிவித்து அங்கிருந்து பாஜகவினர் சென்றனர். இந்த மோதல் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருப்பதற்கு திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.