கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கெடிலம் ஆற்றின் தடுப்பணை அருகே தேங்கி நின்ற தண்ணீரில் குளிக்க சென்ற 7 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வி.கே.சசிகலா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.


இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


கெடிலம் ஆற்றில் தேங்கி நின்ற தண்ணீரில் பள்ளம் இருந்ததால்தான் 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக அனைவரும் கூறுவது எங்கள் வீடுகளில் கழிவறை இல்லாததால் நாங்கள் ஆற்றுக்கு செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அந்தந்த மாநில அரசு மூலமாக கழிவறைகள் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாநில அரசு ஒவ்வொரு ஒன்றியத்தில் இருக்கக்கூடிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் எந்தெந்த வீடுகளில் கழிவறை இல்லை என்பதனை கண்டறிந்து அதற்கான கணக்கீடு செய்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தால் அந்த பணிகள் முழுமையாக முடிக்க ஏதுவாக அமையும்.




பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் என்னை பாஜகவில் இணையலாம் என அழைப்பு விடுத்ததை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால் அவர் அந்தக் கட்சிக்கு நன்றி உள்ள மனிதராக இருப்பதாக தெரியவருகிறது. தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். தற்போது அம்மா நியமிக்கப்பட்டால் என்ன அப்பா நியமிக்கப்பட்டால் என்ன என்பதை பார்க்காமல் கடந்த இரண்டு வருடமாக தன் உயிர்களை பணயம் வைத்து வேலை செய்த செவிலியர்களின் கோரிக்கையை உடனடியாக அரசு ஏற்க வேண்டும். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை எப்படி மூடுவது என இந்த அரசு செயல்பட்டு வருகிறது.




அம்மா உணவகம் திட்டத்தை மாற்றக்கூடாது. இந்த அரசு மக்களுக்கு விரோதம் செய்யும் அரசாக செயல்பட்டு வருகின்றது. இதனை போட்டி அரசியல் செய்வதற்காக சொல்லவில்லை. இதனை ஏன் கூறுகிறேன் என்றால் நான் உள்ளிட்ட பலர் தெரிவிக்கும் கருத்தை அரசு உள்வாங்கி அதற்கான பணிகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஆகையால் சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக அரசு தலையிடுவது நல்லதல்ல.


ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் காவலர்களுக்கு பணி சுமை அதிக அளவில் கொடுக்கவில்லை. ஜெயலலிதா மாவட்ட அளவில் நிகழ்ச்சிக்கு செல்லும்போது ஹெலிகாப்டரில் சென்றதற்கான நோக்கம், காவலர்கள் அதிகளவில் சாலையில் நிற்கக்கூடிய அவல நிலையை தடுப்பதற்காகத்தான். ஏனென்றால் போலீசாரும் மனிதர்கள்தான் என்ற நோக்கத்தில் ஜெயலலிதா செயல்பட்டார். அதிமுக ஆட்சி காலத்தில் திராவிட மாடல் என்பதை அனைத்தையும் செய்து விட்டோம். வருகிற 2024-ஆம் ஆண்டு எம்.பி தேர்தலில் அதிமுக எத்தனை இடத்தில் வெற்றி பெறப் போகிறோம் என்பதை பாருங்கள். நிச்சயமாக அதிக அளவில் வெற்றி பெறுவோம். இவ்வாறு கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண