விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மயிலம் பகுதியை சுற்றி பெரும்பாக்கம், திருவக்கரை, குன்னம், கட்டளை, கீழ்பூதேரி, பெருமுக்கல், தென்னம்பூண்டி, குருவம்மாபேட்டை, அழகியபாக்கம், கீழ்அருங்குணம், பிரம்மதேசம், வெள்ளகுளம்  உள்ளிட்ட 50 மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் ஜல்லி உடைப்பதற்காகவும், எம்சன்ட் மண்ணை தயாரிப்பதற்காகவும் நூற்றுக்கும் மேற்பட்ட கிரசர்கள் இயங்கி வருகின்றது. இங்கு ஜல்லி உடைக்க பயன்படுத்தும் குவாரிகளில் இருந்து அரசு அனுமதித்துள்ள அளவை விட அதிகமாக ஆழப்படுத்தி கற்களை உடைத்து எடுப்பதாக கிராம மக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர்.


திண்டிவனம் - மரக்காணம் சாலையில் இயங்கும் க்ரஷர்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி


இரவு, பகல் பாராமல் தொடந்து இயங்கும் கிரசர்களால் காற்று மாசு ஏற்பட்டு, சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத சூழ்நிலை உள்ளதாகவும். இதனால் சுவாச கோளாறு, தோள் நோய்கள், நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், காற்றில் அடித்து செல்லப்படும் கிரசர் பவுடர்கள்  வீட்டின் உள்ளே வரை வருவதால் உணவிலும், துணிகளிலும் படிந்து சுகாதார சீர்கேட்டுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தேவனையுடன் குற்றம் சாட்டினர்.


கிரசர் பவுடர்கள் அப்பகுதியில் உள்ள விவசாய  நிலங்களை பாதித்து வருகிறது. மேலும் சாலை ஓரம் உள்ள மரங்களில் கிரஷர் பவுடர் படிந்து மரங்கள் வெண்மை நிறத்தில் காட்சி அளிப்பதாக கூறும் அப்பகுதி மக்கள், குவாரிகளில் வைக்கபப்டும் வெடி பொருட்களால் காற்று மாசுபடுவதுடன் அருகே உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைவதுடன் எங்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்கின்றனர். 



இரவு, பகல் முழுவதும் இயங்கும் கிரசர்களில் உடைக்கப்படும் ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றை ஏற்றி செல்வதற்காக அதிக அளவில் டிப்பர் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் மிக அதிமான பாரம் ஏற்றி வேகமாக செல்லும் டிப்பர் லாரிகள் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுடன், மயிலம், திண்டிவனம், மரக்காணம் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக கூறுகின்றனர். குறிப்பாக சமீபகாலமாக டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்வதால் ஏற்படும் மணல் புகையால் கடந்த சில மாதங்களாக விபத்து அதிகரித்துள்ளது.


இதுதொடர்பாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கல்குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், கல் குவாரி, கிரஷர் பகுதிகளில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு அரசு வழிகாட்டுதலுடன் அனுமதி பெற்று இயக்க வேண்டும். லாரி உரிமையாளர்கள் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களை பணியமர்த்திட வேண்டும். மேலும் லாரிகளில் உரிய அளவில் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். எடுத்துச் செல்லும் பொருட்கள் மீது தார்பாய் போர்த்தி எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக அதிவேகத்தில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த மூன்றையும் சரியாக கடைபிடித்தால் விபத்துக்கள் என்பதை முற்றிலும் தவிர்த்திடலாம்.



மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 வரைக்கும் குவாரிகளில் இருந்து லாரிகளை இயக்க வேண்டாம். அதேபோல் வட்டார போக்குவரத்து அலுவலரின் அனுமதி பெற்று அனைத்து லாரிகளிலும் வேக கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தி பயன்படுத்த வேண்டும். மேலும் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கனிமவளத்துறை, வருவாய், காவல், மாசுகட்டுப்பாடு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அப்போது, விதிமுறைகளை மீறி குவாரிகள், லாரிகள் இயங்கினால் உரிமையாளர்கள் மீதுதான் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


எனவே அரசு விதிகளை முறையாக கடைபிடித்து பாதுகாப்பான முறையில் தொழில்களை செயல்படுத்திக்கொள்ள வேண்டும். கண்காணிப்பு கேமாராக்களையும் பொறுத்த வேண்டும். தங்கள் குவாரி பகுதியில் இருந்து மெயின்ரோடு பகுதிக்கு வரும் வரை இடையில் உள்ள சாலைகளை அந்தந்த பகுதி குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து புதுப்பித்திட வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இருந்தால் அதுவும் செய்து கொடுக்கப்படும் என பேசினார்.


திண்டிவனம் - மரக்காணம் சாலையில் இயங்கும் க்ரஷர்களால் பொதுமக்கள் அவதி ; கட்டுபாடுகள் விதித்து ஆட்சியர் அதிரடி நடவடிக்கை







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண