விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கட்டளை, கீழ்பூதேரி, பெருமுக்கல், தென்னம்பூண்டி, குருவம்மாபேட்டை, அழகியபாக்கம், கீழ்அருங்குணம், பிரம்மதேசம், வெள்ளகுளம்  உள்ளிட்ட 50 மேற்ப்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் ஜல்லி உடைப்பதற்காகவும், எம்சன்ட் மண்ணை தயாரிப்பதற்காகவும் நூற்றுக்கும் மேற்பட்ட கிரசர்கள் இயங்கி வருகின்றனர். இங்கு ஜல்லி உடைக்க பயன்படுத்தும் குவாரிகளில் இருந்து அரசு அனுமதித்துள்ள அளவை விட அதிகமாக ஆழப்படுத்தி கற்களை உடைத்து எடுப்பதாக கிராம மக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர்.


இரவு பகல் பாராமல் தொடந்து இயங்கும் கிரசர்களால் காற்று மாசு ஏற்பட்டு, சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத சூழ்நிலை உள்ளதாகவும். இதனால் சுவாச கோளாறு, தோள் நோய்கள், நுரை ஈரல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், காற்றில் அடித்து செல்லப்படும் கிரசர் பவுடர்கள்  வீட்டின் உள்ளே வரை  வருவதால் உணவிலும், துணிகளிலும் படிந்து சுகாதார சீர்கேட்டுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தேவனையுடன் குற்றம் சாட்டினர்.


திண்டிவனம் - மரக்காணம் சாலையில் இயங்கும் க்ரஷர்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி



கிரசர் பவுடர்கள் அப்பகுதியில் உள்ள விவசாய  நிலங்களை பாதித்து வருகிறது. மேலும் சாலை ஓரம் உள்ள மரங்களில் கிரஷர் பவுடர் படிந்து மரங்கள் வெண்மை நிறத்தில் காட்சி அளிப்பதாக கூறும் அப்பகுதி மக்கள், குவாரிகளில் வைக்கபப்டும் வெடி பொருட்களால் காற்று மாசுபடுவதுடன் அருகே உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைவதுடன் எங்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்கின்றனர். 



க்ரஷர்களால் ஏற்படும் சாலை விபத்துகள் 


இரவு பகல் முழுவதும் இயங்கும் கிரசர்களில் உடைக்கப்படும் ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றை ஏற்றி செல்வதற்காக அதிக அளவில் டிப்பர் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் மிக அதிமான பாரம் ஏற்றி வேகமாக செல்லும் டிப்பர் லாரிகள் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுடன், திண்டிவனம், மரக்காணம் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக கூறுகின்றனர். குறிப்பாக சமீபகாலமாக டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்வதால் ஏற்படும் மணல் புகையால் கடந்த சில மாதங்களாக விபத்து அதிகரித்துள்ளது.   இது தொடர்பாக கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் திண்டிவனம் – மரக்காணம் சாலையில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ABP நாடு செய்தியாக வெளியிட்டது.



ஏபிபி நாடு செய்தி எதிரொலி:


செய்தி எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் எம்சேன்ட் தயாரிப்பாளர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.மோகன் அவர்கள், செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-


எம்சேன்ட், ஜல்லி, டஸ்ட், சிப்ஸ் மற்றும் ஜி.எஸ்.பி மிக்ஸிங் ஆகியவற்றை தார்பாய் கொண்டு மூடப்படாமல் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதோடு விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே இவற்றை தவிர்க்கும் பொருட்டு எம்சேன்ட், ஜல்லி, டஸ்ட், சிப்ஸ் மற்றும் ஜி.எஸ்.பி மிக்ஸிங் ஆகியவற்றை தயாரிக்கும் கிரஷர் உரிமையாளர்கள் அனைவரும் தங்களிடம் எம்சேன்ட், ஜல்லி, டஸ்ட், சிப்ஸ் மற்றும் ஜி.எஸ்.பி மிக்ஸிங் ஆகியவற்றை ஏற்றவரும் வாகனங்களுக்கு தார்பாய் இருந்தால் மட்டுமே விற்பனை செய்யப்படவேண்டும்.




தார்பாய் இல்லாமல் மேற்படி பொருட்களை ஏற்ற வரும் வாகனங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. மேலும் மேற்படி பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அனைத்தும் தார்பாய் போட்டு மூடிய பிறகு தான் கிரஷர் யூனிட்டை விட்டு வெளியே செல்லவேண்டும் என வாகன உரிமையாளர் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தவேண்டும். தவறும் பட்சத்தில் வாகன உரிமையாளர் மற்றும் வாகன ஒட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.