அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர்ஆனந்த் சொல்வது மட்டுமே வேலூரில் நடக்கிறது. திமுகவின் மாவட்ட செயலாளரை போல் மாவட்ட ஆட்சியர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறார். வேலூர் மாவட்ட அதிமுகவினர் சரமாரி தாக்கு.

 

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் தொடர்பான அனைத்து கட்சியினருடனான ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும், கோரிக்கைகளையும் மாவட்ட ஆட்சியரிடம் முன் வைத்தனர்.

 



 

அப்போது அதிமுக சார்பாக பேசிய மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு , கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வது, வெற்றி பெற்றவர்களை வெற்றி வாய்ப்பின்றி செய்வது போன்றவை நடைபெற்றது. ஒருவர் வெற்றி பெற்றுவிட்டால் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அரை மணி நேரத்திற்குள் அதிகாரிகள் வழங்க வேண்டும். ஆனால், ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக கால தாமதத்துடன் தான் வழங்கினர் என்று குற்றச்சாட்டை மாவட்ட ஆட்சியரிடம் முன் வைத்தார். மேலும் இது போன்று வரக்கூடிய தேர்தலில் நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இதற்கு பதிலளித்த ஆட்சியர், இது தொடர்பாக தான் தங்கள் கட்சி சார்பில் ஆளுநரிடம் மனு அளித்துள்ளீர்களே, அவர்களிடமே அதை கேட்டு கொள்ளுங்கள் ஆளுநர் பார்த்து கொள்வார் என்று பதிலளித்துள்ளார்.

 

இந்நிலையில் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு கூறுகையில், காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகனும் அவருடைய மகன் கதிர் ஆனந்தும், கூறுபவர்களை தான் இந்த தேர்தலில் வெற்றி பெறச் செய்துள்ளனர். அது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டோம் அதற்கு மாவட்ட ஆட்சியர் ஆளுநரிடம் மனு அளித்துள்ளீர்கள் அவர்களிடமே அதை கேட்டுக் கொள்ளுங்கள் ஆளுநர் பார்த்துக்கொள்வார் என்று பதிலளித்தார். 

 

திமுகவின் மாவட்ட செயலாளரை போல் மாவட்ட ஆட்சியர் நடந்துகொள்வது கண்டனத்திற்குரியது.  திமுகவுக்கு சாதகமாகவும், ஒருதலைப்பட்சமாகவும் மாவட்ட ஆட்சியர் நடந்துகொள்கிறார். இங்குள்ள அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகன் கதிர் ஆனந்த் கூறுவது தான் வேலூர் மாவட்டத்தில் நடைபெறுகிறதே, தவிர ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை, விதிமீறல்கள் நடைபெறுகிறது.

 


 

இன்றைக்கு நடைபெற்ற மாநகர, நகர, பேரூராட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கூட கண்துடைப்புக்காக நடத்தப்பட்டுள்ளது. தனது மினிட் புத்தகத்தில் எழுதுவதற்காக மாவட்ட ஆட்சியர் இந்த கூட்டத்தை நடத்தியுள்ளாரே தவிர முறைப்படி ஏதும் நடைபெறவில்லை. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் போது தேர்தல் முறையாக சட்டத்தை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் அதிமுக சார்பில் மனு அளித்து இருந்தோம். இருப்பினும் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டோம். ஆனால், அவர் அதற்கு செவி சாய்க்கவில்லை என்றார். மூன்று மணிக்கு துவங்கிய இந்த கூட்டமானது மூன்றரை மணிக்கு முடிவடைந்துள்ளது. அரை மணி நேரத்திற்குள்ளாக இந்த கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது கண்டனத்திற்குரியது. மேலும் நடைபெற உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலும் இதே போன்று முறைகேடாக நடைபெற்றால் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் அதிமுகவினர் ஈடுபடுவோம் என்று கூறினார்.