வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மோர்தனா கிராமத்தில் கவுண்டன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது மோர்தானா அணை. இது 11.50 மீட்டர் உயரத்தில், அணையில் 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மோர்தானா அணை தற்போது தனது முழு கொள்ளளவான 11.50 மீட்டரை அடைந்து உபரிநீர் கவுண்டன்ய ஆற்றின் வழியாக வெளியேறி வருகிறது. ஆந்திராவை நீர்பிடிப்பு பகுதியாக கொண்ட மோர்தானா அணை, ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. ஏற்கெனவே அணை முழுவதுமாக நிரம்பியுள்ள நிலையில் விவசாயத்துக்காக அணையின் இடது மற்றும் வலது புற கால்வாயில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

 



 

மேலும் தற்போது மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் கவுண்டன்ய ஆற்றில் வெளியேறி வருவதன் காரணமாக ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மோர்தானா, கொட்டாரமடுவு, ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, ஜங்களபள்ளி, உப்பரபள்ளி, தட்டப்பாறை, ரங்கசமுத்ரம், ரேணுகா புரம், அங்ரகாரம், பெரும்பாடி, குடியாத்தம் நகர, இந்திராநகர், ஒலக்காசி, சித்தாத்தூர், மற்றும் ஐதர்புரம் ஆகிய கிராமங்களில் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், கவுண்டன் ஆற்றில் எந்நேரமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆற்றில் குளிப்பது மற்றும் துணி துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். எனவும் மேற்படி ஆற்றில் சிறுவர்கள் குளிக்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



 

குடியாத்தம் நகருக்குள் பாயும் கவுண்டன்ய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் அருகே அமைந்துள்ள தரைபாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடியாத்தம் காமராஜர் பாலத்தை மட்டுமே பயன்படுத்துவதால் குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அனைத்து ஏரி, குளம், குட்டை ஆகியவை முழுவதுமாக நிரம்பி உள்ளது. மேலும் வேலூர் மாவட்டத்தில் பாயும் பாலாறு மற்றும் பொன்னையாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும். மாவட்டத்தில் மழை பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1077 மற்றும் 0416-2258016 ஆகிய தொலைபேசி எண் மூலமும்  9384056214 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமும்  பொதுமக்கள் மழை வெள்ள பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமார் பாண்டியன் தெரிவித்துள்ளார்