வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்துக்குட்பட்ட திருவலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது குப்பத்தாமோட்டூர் கிராமம். இக்கிராமத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு அரசு கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் அரசு நிலப்பட்டா வழங்கியுள்ளது. இதில் ஒருவர் அரசு வீடு கட்டியும், ஒருவர் சிமெண்ட் சீட்டால் ஆன வீடு கட்டியும் வசித்து வருகின்றனர். இதில் ஒருவரான ஜீவா (52) என்ற பெண் அப்பகுதியில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றார். இவர்கள் இரு இருளர் குடும்பத்தார் வசிக்கும் வீடு மாற்று சமுகத்தினர் வசிக்கும் பகுதிக்கு மத்தியில் இருப்பதால் இவர்களை இங்கிருந்து காலி செய்ய மாற்று சாதியினர் முயற்சி செய்வதாக ஜீவா என்ற பெண் இன்று திருவலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில்,



இவரது வீட்டைத் தாண்டி தான் அண்ணாமலை என்ற மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவரின் வீடும் நிலமும் உள்ளது. இவர்களது நிலத்திற்க்கு செல்ல வழி வேண்டும் என்பதால் நீண்ட காலமாக இருளர் சமுதாய மக்கள் அங்கு வசிப்பது அவர்களுக்கு தொந்தரவாக இருந்ததாகவும் வீட்டை காலி செய்யும்படி பலமுறை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இச்சூழலில் நவம்பர் 6ஆம் தேதி காலை 7 மணியளவில் அண்ணாமலை மற்றும் அவரது மகன்கள் வேல்முருகன், வேலுமணி, வெங்கடேசன் ஆகிய மூவரும் சேர்ந்து ஜீவாவின் வீட்டின் முன்பாக இருந்த மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். இதனை தடுக்கச் சென்ற பெண்ணை அடித்து கீழே தள்ளியும், சாதிப் பெயரைக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், புல்டோசர் இயந்திரம் கொண்டு வீட்டை தரைமட்டம் ஆக்கிடுவோம் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, பாதிக்கப்பட்ட பென் ஜீவா நேற்று திருவலம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் காவல்துறையினர் அண்ணாமலை உள்ளிட்டோரை நேரில் அழைத்து விசாரித்து விட்டு எச்சரித்து அனுப்பியுள்ளனர். 

 



 

இருப்பினும் மீண்டும் நேற்று காலை வெங்கடேசன் என்பவர் அத்துமீறி, தங்கள் மீதே புகார் கொடுக்குறியா கென கூறி, ஜீவாவின் வீட்டினுள் நுழைந்து கதவை உடைத்து பாத்திரங்களை வெளியே எறிந்தும், வீட்டில் இருத்து சாலைக்கு செல்லக்கூடிய பாதையை வேலி போட்டு மறைத்தும் உள்ளனர். இந்நிலையில், மக்கள் மன்றம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் உதவியுடன், அத்துமீறு நடந்து கொண்ட நபர்களை பிடித்து விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இன்று திருவலம் காவல்துறையினரிடம் ஜீவா புகார் மனு அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.