ஜோலார்பேட்டை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில்  ஒரு பெண்ணின் உடல்  பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, சிதைந்த உடலை அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனர் . இறந்த பெண் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக, அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் பகுதிகளில், காணாமல் போன  பெண்கள் விபரங்களை திரட்டி விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பெரியகம்மியம்பட்டு மற்றும் காவேரிபட்டு ஊராட்சிகளுக்கு இடையே ஏரி பகுதியில் குட்டாறு தரைப்பாலம் உள்ளது. உரிய பராமரிப்பு இன்றி, அடர்ந்த புதர்கள் மண்டிப்போய் இருப்பதால், பகல் நேரத்திலேயே அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருவார்கள். மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இருப்பவர்கள் அங்கு மாடு மேய்க்க செல்வதற்கு கூட மிகவும் அச்சப்படுவார்கள்  .




இந்தநிலையில் நேற்று மதியம் அந்த வழியாக சிலர் ஆடு மாடு மேய்க்க சென்றுள்ளனர். அப்பொழுது அந்த பகுதியில் ஏதோ ஒரு பொருள் எரிந்து , தீயில் கருகிய துர்நாற்றம் வீசுவதை உணர்ந்துள்ளனர். முதலில் என்னவென்று பார்ப்பதற்கே அச்சப்பட்ட அவர்கள் , பிறகு அந்த பகுதியில் ஆடு மாடு மேய்க்கும் மற்றும் சிலரை , சேர்த்து கொண்டு அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது தலை உள்ளிட்ட அனைத்து உடல் பாகங்களும் எரிந்து சாம்பலான நிலையில், முட்டிக்கு கீழ் வலது காலும், வலதுகை ஒன்றும் மட்டும் எரியாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 


உடனடியாக இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிக்கப்பட்டு கிடப்பது ஆண் சடலம் அல்லது பெண்ணின் சடலமா என்பது குறித்து சோதனை செய்தனர். அப்போது வலது கால் விரலில் மெட்டி மற்றும் கைகளில் வளையல்கள், கருகிய நிலையில் இருந்தன. மேலும் சிவப்பு நிறத்தில் சேலை அந்த உடல் மீது இருந்ததால்  எரித்துக் கொலை செய்யப்பட்டவர் பெண் என்பதை உறுதிசெய்தனர் . 




இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, துணைபோலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு எரித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் சிம்பா சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பெரியகம்மியம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நின்றது.  மேலும் தடயவியல் நிபுணர்கள் குழு சம்பவ இடத்திற்கு வந்து  தடயங்களை சேகரித்தனர் . 


முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தனர் . பின்னர் எரிந்த பெண்ணின் உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொடூரமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ள பெண் யார் என்பதனை கண்டுபிடிக்க , திருப்பத்தூர் எஸ்பி தனிப்படை அமைத்து , ஜோலார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சமீப காலத்தில் காணாமல் போன பெண்களின் விபரத்தை திரட்டி  விசாரணை மேற்கொண்டு வருகின்றார் .மேலும் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு அந்த பெண்ணை  எரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்  . 




வேறுபகுதியில் இருந்து அழைத்துவந்து கொலைசெய்து உடலை எரித்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் மேகலா, ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
பெண் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.