வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வந்தவாசி கோட்டை தற்போது  சிதிலமடைந்து, மக்கள் சென்று பார்க்க முடியாத நிலையில் உள்ளது.  இதனை சீரமைக்க சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்பதை பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.


1760 ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் நாள் பிரெஞ்சுக்காரர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இடையே நடந்த வந்தவாசிப் போர் இந்திய- ஐரோப்பிய வரலாற்றின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த போருக்குப் பின்னர் இந்தியாவை ஆளும் அதிகாரம் பிரிட்டிஷ்காரரிடம் முழுமையாகச் சென்றது. திருவண்ணாமலை அருகே இருக்கும் வந்தவாசியில் நடந்த போர்தான், ஒட்டுமொத்த இந்தியாவும் பிரிட்டிஷ் பிடியின் கீழ் வீழ்வதற்கு வித்திட்ட முக்கியப் போர்.


பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சு படைக்கும் தென்னிந்தியாவைக் கைப்பற்றுவதில் பெரும் போர் நடந்து கொண்டிருந்த 18-ம் நூற்றாண்டின் இறுதிக்காலம் அது. பிரிட்டிஷ் வசம் இருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றுவதற்கு, புதுச்சேரி பகுதியில் இருந்து பிரெஞ்சு அரசு பெரும் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தது. 1760-ம் ஆண்டு, இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் உள்ள வந்தவாசிக் கோட்டையைக் கைப்பற்ற போர் தொடுத்தது பிரெஞ்சுப் படை.



பிரிட்டிஷ் தளபதி அயர் கூட், தாமஸ் ஆர்தர் லாலி தலைமையிலான பிரெஞ்சுப் படையுடன் மோதியது. அந்தச் சமயம் தென்னிந்தியாவை கைப்பற்ற பிரிட்டிஷும் பிரெஞ்சும் `மூன்றாம் கர்நாடகப் போரில்’ மோதிக்கொண்டிருந்தன. 1756-aaம் ஆண்டு தொடங்கிய மூன்றாம் கர்நாடகப் போர் நடந்து கொண்டிருக்கையிலேயே வந்தவாசிக் கோட்டையை பிரெஞ்சுப் படை கோட்டைவிட்டது. வந்தவாசியில் பிரிட்டிஷிடம் படுதோல்வி அடைந்தது பிரெஞ்சுப் படை. இந்த வெற்றி இங்கிலாந்து நாட்டின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது.மூன்றாம் கர்நாடகப் போரை பிரிட்டிஷ் வெல்வதற்கும், தென்னிந்தியாவை முழுமையாக கைப்பற்றுவதற்கும் இந்த வந்தவாசி போர் பெரிதும் உதவியது.


பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் பலமாகக் கால் ஊன்றி ஆட்சி, அரியணையில் அமர இந்த வந்தவாசிப் போர் தான் ஆங்கிலேயருக்கு உதவியது என்பது வரலாறு. கிட்டதட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை இந்தப் போருக்குப் பிறகு முழுமையாக 187 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போரின் போது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சார்பில் படை தளபதியாக அயர் கூட் , பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி சார்பில் தளபதியாக   தாமஸ் ஆர்தர் லாலி ஆகியோர் போரில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.



பிரிட்டன் படை சார்பாக 80 ஐரோப்பியக் குதிரைகள், 250 உள்நாட்டுக் குதிரைகள், 1,900 ஐரோப்பியக் காலாட்படை, 2,100 சிப்பாய்கள், 26 பீரங்கிகள் இருந்தன பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி சார்பாக 300 ஐரோப்பிய குதிரைப்படை, 2,250 ஐரோப்பிய காலாட்படை, 1,300 சிப்பாய்கள், 3,000 மராட்டியர், 16 பீரங்கிகள் இருந்தன. இது இறுதியில் போரில் தோல்வியடைந்த பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்தவர்கள் பாண்டிச்சேரியில் தஞ்சம் புகுந்தனர். கடைசிவரை பாண்டிச்சேரியை மட்டும் விட்டுக் கொடுக்காமல் ஆட்சி புரிந்து வந்தனர்.இந்த அளவிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வந்தவாசி கோட்டை தற்போது  சிதிலமடைந்து, மக்கள் சென்று பார்க்க முடியாத நிலையில் உள்ளது.  இதனை சீரமைக்க சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்பதை பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.