விழுப்புரம் மாவட்டம் மரக்கோணம் பகுதியிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 20க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. மீதம் உள்ள நபர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கியுள்ளார். மேலும் பல கட்சிகளின் தலைவர்களும் உயிரிழந்த குடும்பத்தினர்க்கு நேரில் சென்று ஆறுதல் கூறியும், சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு மாநிலம் முழுவதும் சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பவர்களை பிடிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் கள்ள சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் வரையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 117 கள்ளச்சாராய ஊரல்கள் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்யப்பட்டுள்ளனர்.




மேலும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி உட்கோட்டத்தில் இதுவரை கள்ளசாராயம் காய்ச்சிய மற்றும் கள்ள சாராயம் விற்பனை செய்தோர் 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று ஆரணி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையில் வடுகசாத்து பகுதியில் சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மீனா என்கின்ற பெண்மணி அவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் அடுப்பில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்த ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் அந்தப் பெண்மணியின் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டில் கேஸ் மூலம் சாராயம் காய்ச்சிக்கொணடு இருந்தார். இதனைக்கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பெண்மணி சாராயம் காய்ச்சிக்கொணடு இருந்த போதே கையும் களவுமாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 100 லிட்டர் சாராயத்தையும் அதற்கு பயண்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர். 




அதேபோல் ஆரணி அருகே வேதாஜிபுரம் காட்டுப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபடும் போது சுரேஷ் மற்றும் ஆறுமுகம் இருவரும் சாராயம் விற்பனை செய்யும்பொழுது சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 500 லிட்டர் சாராயத்தை அழித்தனர். ஆரணி கிராமிய காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு பெண் உட்பட மூன்று நபர்கள் கைது செய்து அவர்களிடம் இருந்து 600 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது. ஆரணி அருகே பெண்கள் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் சம்பவம் அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.