வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியிடு, வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று தமிழக அரசின் சாதனை மலரை வெளியிட்டு 1400 பயனாளிகளுக்கு 3 கோடியே 61 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் பேசியஅமைச்சர் துரைமுருகன் பேசுகையில், "அரசால் தரப்படுகின்ற திட்டங்களை அமல்படுத்த வேண்டியது மாவட்டத்தின் கடமை. குறிப்பாக கலெக்டரின் கடமை. ஒரு ஆட்சி சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருக்கு உதவுவது கடமை. வாழ்வில் நலிந்த பிரிவினருக்கு உதவி பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு அரசே முன் நின்று விலையில்லா பொருட்களை தந்து அவர்களை வாழ வைக்கிறது .வாழ்வாதாரம் இருப்பவர்களுக்கு தொழில் முனைவோராக நிதியை அரசு கொடுக்கிறது. கொடுக்கும் நிதியை பல்வேறு பிரிவு அதிகாரிகள் அந்தந்த துறையை செம்மைப்படுத்த வேண்டும். அப்போது தான் அரசு போட்ட திட்டங்கள் மக்களுக்கு போய் சேரும். குறிப்பாக முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, முதிர் கன்னி உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரணத்தால் ஏற்படும் உதவித்தொகை, விபத்தினால் இறந்தவர்களுக்கான உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, தையல் எந்திரம், தையல் எந்திரம், செலவைப் பெட்டி என பல்வேறு திட்டங்களுக்கு அரசு பணத்தை ஒதுக்கீடு செய்கிறது. விவசாயிகளுக்கு கரையை பலப்படுத்துதல் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.


 




இங்கே இருக்கிற அதிகாரிகள் அப்படிப்பட்ட பயனாளிகளை தேடி கண்டுபிடித்து திட்டங்களை கொண்டு போய் சேர்க்க உதவி செய்ய வேண்டும். இப்போது ரூ.3 கோடியே 61 லட்சத்து 88,ஆயிரத்து 33 அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதுபோதாது, இது ரூ.30 கோடியாக இருந்தால் அனைவரையும் பாராட்டிருப்பேன். சில இடங்களில சில துறைகளை பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் துறையில் தையல் எந்திரம் ஒருவருக்கு தான் கிடைக்கிறது. முதிர்கன்னி உதவித்தொகை 4 பேருக்கும், சலவை பெட்டி 5 பேருக்கும், புதிய தொழில் முனைவராக ஒருவருக்கும், வீல் சேர் 2 பேருக்கும் வழங்கப்படுகிறது. அரசு கொடுக்கிறது. அதிகாரிகள் இறங்கி வேலை செய்ய வேண்டும். கலெக்டர் சுறுசுறுப்பானவர் தான். ஆனால் அவர் இலாக்காவை முடுக்கிவிட வேண்டும். அடுத்த முறை வரும்போது ரூ.30 கோடி அளவில் நலத்திட்டம் இருந்தால் அனைவரையும் வாழ்த்துவேன்.




தளபதி ஆட்சியில் அவர் 24 மணி நேரமும் மக்களுக்கான திட்டங்களை திட்டி செயல்படுத்தி வருகிறார். சில நேரங்களில் சில தவறுகளை மக்கள் செய்துவிடுகிறார்கள். விஷ சாராயம் குடித்து பல பேர் இறந்து விட்டார்கள் என்ற செய்தி கேட்டவுடன் முதலமைச்சர் சாப்பிடாமல் கூட விழுப்புரத்திற்கு சென்று விட்டார். அங்கு சிகிச்சை பெறுபவர்களை பார்த்து நலம் விசாரித்துவிட்டு வரும் வழியில் தான் அவர் சாப்பிட்டார . கொரோனா காலத்தில் தன்னுடைய உயிரை பணயம் வைத்து கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்த்து அவர்கள் தேவையான உதவிகளை செய்ய சொல்லி உத்தரவிட்டார். அடிதட்டு மக்களுக்கு பணிபுரிய வேண்டும் என எங்கள் தலைவர் கலைஞர் சொல்லியுள்ளார். அதனை தளபதி செயல்படுத்தி வருகிறார்.


 




பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லம், தொழுநோயாளிகளுக்கு மறுவாழ்வு இல்லம் அமைத்து இப்போது கிராமப் பகுதிகளில் தொழு நோயாளிகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. வேலூர் சேம்பாக்கம் இடையில் 5 அடி அளவில் ஒரு தடுப்பணை கட்டப்படுகிறது. இது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். காவிரியில் மாயனூர் என்ற இடத்தில் நான் அப்போது தடுப்பணை கட்டினேன். இப்போது அந்த இடங்கள் முள் காடுகளாக இருந்தது மாறி வாழைத்தோட்டங்களாக மாறி நிலங்களே அதிக விலைக்கு விற்கிறது. தற்போது வேலூர் மாவட்டத்தில் இறையங்காடு,கவசம்பட்டு உள்பட 7 இடங்களில் தடுப்பணை கட்டப்படுகிறது. இந்த ஆண்டு சிப்காட் தொழிற்சாலை காட்பாடியில் கொண்டுவரப்பட உள்ளது. அடுத்த மாதம் இறுதியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூரில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.