தற்கொலை செய்து கொள்வதாக அலப்பறை செய்த வட மாநிலத்தவர் மரத்திலிருந்து கீழே குதித்து படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்து மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் வயது 25 என்ற வாலிபர் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் காமராஜர் நகர் பகுதியில் உள்ள 25 அடி உயரமுள்ள அரசு மரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக அலப்பறையில் ஈடுபட்டார். 

 

இதனை அறிந்த பகுதி மக்கள் திருப்பத்தூர் நகர காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் வந்து பார்த்தபோது மரத்தின் அருகே மின்சார கம்பிகள் சென்றதால் மின்சாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்து மின்சாரத் துறை அதிகாரிகளின் உதவியால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 



 

பின்னர் தீயணைப்புத் துறையினர் மரத்தின் அருகே நான்கா பக்கமும் பெரிய பந்தல் துணியால் பிடித்துக் கொண்டனர். பின்னர் வடமாநில நபரை மரத்திலிருந்து கீழே இறக்க தீயணைப்பு துறையினர் மரத்தின் மீது ஏறிய போது, ஆவேசப்பட்ட வடமாநில வாலிபர் மரத்தின் மீது இருந்து திடீரென கீழே குதித்தார். அப்போது பந்தலின் துணி கிழிந்து வடமாநிலத்தவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. 



 

பின்னர் இவரை போலீசார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவர் எதற்காக  தற்கொலைக்கு முயன்றார் என்ன காரணம் என திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  வட மாநிலத்தவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.