திருப்பத்தூர்: கந்திலி அருகே கூலி  தொழிலாளி வேலை செய்யும் போது தவறி விழுந்து உயிரிழந்தார். உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


 


திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கட்டனூர் அடுத்த முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி.  இவருக்கு மூன்று மகன்கள் மூத்த மகன் முருகானந்தன் (38). இவர் மரம் ஏறும் தொழில் செய்து வந்துள்ளார். 

இவருக்கு விஜயலட்சுமி (26) என்ற மனைவியும் புவியரசு (3) மற்றும் கோபிநாத் என்ற கைக்குழந்தையும் உள்ளனர். 

 

இந்நிலையில் நேற்று காலை பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக வேலைக்கு சென்றார். மரத்தின் மீது ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சுமார் 70 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அதில் தலையில் அடிப்பட்டதால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

 

பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். முருகானந்தனுக்கு மூளைச் சாவு  ஏற்பட்டு கோமா ஸ்டேஜில் உள்ளார். இவரை காப்பாற்றுவது மிக கடினம் என  மருத்துவர்கள் தெரிவித்தனர். 

 

அதை தொடர்ந்து தொழிலாளியின் உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்துள்ளனர். பின்னர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையில் உடல் உறுப்பு தானம் செய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிறகு முருகானந்தனின்  உறவினர்களிடம் உடலை ஒப்படைக்கப்படும் என அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர்

 


கை குழந்தையுடன் தவித்து நிற்கும் கூலி தொழிலாளியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர் பாண்டியன் உடல் உறுப்பு தானம் செய்த கூலி தொழிலாளியின் உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

 

முருகானந்தனின்  உடல் அரசு மரியாதையுடன் இன்று அவரது சொந்த ஊரில்  பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.