திருப்பத்தூரில் சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளியலிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாப்பட்டு ஊராட்சியில் ஏலகிரி மலை தென்திசை  அடிவாரத்தில் அமைந்துள்ளது புகழ்வாய்ந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது.

இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோயிலும் உள்ளதால் தமிழகமெங்கும் உள்ள பல்வேறு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து வழிபட்டு நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு செல்வது வழக்கம். 




இந்த நீர்வீழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகும். தற்சமயம் சில தினங்களாக பெய்த கோடை  மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது நீர்வரத்து தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

மேலும், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி புதுப்பொலிவுடன் சிறுவர்களை கவரும் வண்ணம் பூங்கா,  வனவிலங்குகளின் ஓவியங்கள், உடை மாற்றும் அறை மற்றும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க கூடாரம் உள்ளிட்டவையை புதுப்பொலிவுடன் அமைத்துள்ளனர்.

 

இந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா, பெங்களூரு மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குடும்பத்துடன் குளித்து விட்டுச் செல்கின்றனர்.

 

இருப்பினும் உள்ளூர்வாசிகள் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.