திருப்பத்தூரில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து புழுக்கள் உடன் வரும் தண்ணீரால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் சுமார் 36 வார்டுகள் உள்ளன. இதில் எட்டாவது வார்டு பகுதியான எல்லம்மன் கோவில் தெரு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் சில மாதங்களாக இங்கு நகராட்சி நிர்வாகத்தால் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு கலந்து புழுக்களுடன் வரும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்த குடிநீர், கழிவு நீர் போல் காட்சியளிக்கிறது. துர்நாற்றம் வீசும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை அப்பகுதி மக்கள்  வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களையும் பரவச் செய்துள்ளனர்.



 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பல நாட்களாக இதே குடிநீரை தான் நாங்கள் குடித்து வருகிறோம். இந்த குடிநீரை குடித்ததால் இந்தப் பகுதியில் நான்கு குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. 

 

மேலும், நாங்கள் குடிக்கும் குடிநீரை அதிகாரிகள் குடித்து பார்த்தால்தான் எங்களுடைய ஆதங்கங்கள் புரியும் நகராட்சி நிர்வாகம் விஷத்தை கொடுத்தாலும் குடித்தே ஆக வேண்டும் என்ற நிலைமை எங்களுக்கு உள்ளது. எனவே இதனை சரி செய்ய வேண்டும் இல்லையென்றால், சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.