ஆம்பூரில் பழைய துணி குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு லட்சம் மதிப்பிலான பழைய துணிகள் தீயில் எரிந்து நாசமானது. மேலும், இரண்டாவது மாடியில் சிக்கிக் கொண்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா வளையக்கார வீதியை  சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு சொந்தமான சாமியார்மடம் பகுதியில் உள்ள குடோனில் ஒடிசாவை சேர்ந்த இம்ரான் என்பவர் இரண்டு ஆண்டுகளாக பழைய துணிகள் வியாபாரம் செய்து வந்துள்ளார். 

 

இந்த நிலையில் திடீரென குடோன் கீழ் மாடியில்  தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் கண்டு தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



 

மேலும், குடோனின் மேல் மாடியில் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான் என்பவரை தீயணைப்புத் துறையினர் ஏணி மூலம் பத்திரமாக மீட்டனர்.

 

பழைய துணி குடோனில் தீப்பற்றி எரிந்ததில் சுமார்  2 லட்சம் மதிப்பிலான பழைய துணிகள்  தீயில் எரிந்து நாசமானது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆம்பூர் நகர காவல் துறையினர் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சமூக விரோதிகள் யாரேனும் தீ  கொளுத்தி போட்டுவிட்டு சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.