மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தில் மாவட்ட அளவில் செம்மையாக செயல்படுத்திட வேண்டிய நடவடிக்கைகள்


மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டமானது 2022 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூபாய் 1000 வீதம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையில் 2024 - 2025 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல்-12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


 


தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகத்தில் புதிய கணக்கு தொடங்கி  பயனடையலாம் 


2023 - 2024 ஆம் கல்வியாண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமாக பதிமூன்றாயிரத்து எண்நூற்று இருபத்தி ஏழு மாணவிகள் தேர்வு எழுதி, அதில் பன்னிரண்டாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி நான்கு மாணவிகள் தேர்ச்சிபெற்றுள்ளனர். எனவே 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று மேற்படிப்பிற்காக பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் சேரும் அனைத்து மாணவியரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகத்தில் புதிய கணக்கு தொடங்கி இத்திட்டத்தில் பயனடையுமாறு இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியவாறு இத்திட்டத்தில் பயன்பெறும் கல்லூரிகளின் முதல்வர்கள் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சமூக நல விரிவாக்க அலுவலர்கள் மகளிர் ஊர்நல அலுவலர்கள் அனைவரும் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறும் மாணவியர்களின் விவரங்களை விரைவில் இணைய முகப்பில் பதிவேற்றம் செய்யுமாறும் மேலும் மாணவிகள் இத்திட்டத்தில் தொடர்ந்து பயனடைவதை மாதமாதம் உறுதி செய்யுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.