திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தின் மலையருகே பண்டைய கால ஓவியங்கள் இருப்பதாக வரலாற்று ஆர்வலர் பாரதிராஜா கொடுத்த தகவலின் படி திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வுநடுவத்தைச் சேர்ந்த மதன்மோகன், பழனிச்சாமி, பாலமுருகன் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்து பண்டைய கால ஓவியத்தை கண்டு பிடித்துள்ளனர் ,  இது குறித்து வரலாற்று ஆய்வுநடுவத்தை சேர்ந்த பால முருகனிடம் பேசினோம். நாங்கள் வாரம்தோறும் கல்வெட்டுகளை ஆய்வு செய்து மக்களுக்கு புதிய புதிய செய்திகளை சொல்வோம் அப்படி தான் எங்களுக்கு ஒரு பாறை ஓவியம் பற்றி தகவல் வந்தது அதனை ஆய்வு செவதற்கு எங்களுடைய இருசக்கர வாகனத்தில் பயணத்தை துவக்கினோம்.




வேட்டவலத்திற்கு வடகிழக்காக அமைந்துள்ள மலைப்பகுதியில் நல்லான் பிள்ளை பெற்றாள் என்ற கிராமத்தின் நந்தன் கால்வாய் அருகே ஒரு பாறையில் இரண்டு பகுதிகளாக ஒவியங்கள் காணக்கிடைத்தன. இதில் பாறையின் உயரமான பகுதியில் உள்ள ஓவியத் தொகுதியில் மீன் அல்லது ஆமை போன்ற தோற்றம் கொண்ட செஞ்சாந்து நிறத்தில் சுமார் 3 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட ஒரு ஒவியமும் அதன் அருகில் ஊர்வன போன்ற வடிவம் கொண்ட ஓவியம் சுமார் 2 அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்டுள்ளது. அதன் அருகில் சுமார்  ஒரு அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட சிறிய அளவிலான மீன் அல்லது ஆமை போன்ற வடிவம் கொண்ட மற்றொரு ஒவியமும் அமைந்துள்ளது. இந்த பாறையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள ஓவியத் தொகுதியில் இரண்டு மனிதர்கள் உருவமும் வடிவியல் சார்ந்த குறியீடு கொண்ட ஒவியங்களும் உள்ளன. இந்த ஓவியங்கள் வெண்சாந்து நிறத்தில் வரையப்பட்டுள்ளது. அதன் அருகே உள்ள பாக்கம் கிராமத்திலும்  ஏரிக்கரையின் அருகில் உள்ள மற்றொரு பாறை ஒன்றில் மங்கலான நிறமுடைய வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியபட்டன, 



இவ்வோவியங்கள் குறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது, இங்கு இரண்டு காலகட்டத்தைச் சேர்ந்த ஓவியங்கள் உள்ளன என்றும் முதலாவது பிரிவில் உள்ள ஓவியங்கள் வெண்சாந்து மற்றும் செஞ்சாந்து நிறங்கள் கலந்த ஓவியங்கள் உள்ளன என்றும் இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் இரண்டாவது தொகுதி ஓவியங்கள் வடிவியல் சார்ந்த குறியீடுகள் தனியாகவும் மனித உருவங்களும் சேர்ந்து  வரையப்பட்டுள்ளன. இதில் கோடுகள் மிகத் தெளிவாகவும் வலிமையாகவும் காட்டப்பட்டுள்ளது. சில குறியீடுகள் கீழ்வாலை மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் உள்ள குறியீடுகள் போன்ற வடிவத்தை ஒத்துள்ளது. மேலும் இங்கு மனித உருவங்களில் ஆண்குறி வரையப்பட்டுள்ளது இதுபோன்று ஒரு சில இடங்களில் மட்டுமே காணக் கிடைக்கின்றது. அருகில் உள்ள பாக்கம் கிராம எல்லையில் உள்ள ஓவியங்கள் மங்கிய நிலையில் மனித உருவங்கள் மட்டும் வரையப்பட்டுள்ளது.



இந்த ஓவியங்கள்  பெருங்கற்கால ஓவியங்களாக கருதப்படுகின்ற ஓவியங்கள் போல உள்ளது. என கூறினார். இதன் அருகில் உள்ள செத்தவரை, கிழ்வாலை போன்ற ஊர்களிலும் ஏற்கனவே பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. தொடர்ச்சியாக இப்பகுதியில் பாறை ஓவியங்கள் கிடைத்து வருவது இதன் தொல்லியல் முக்கியத்துவத்தையும் அக்கால மனிதர்களின் கலை சிறப்பினையும் உணர்த்துகிறது. இந்த ஓவியங்களை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தொல்லியல் துறை பாதுகாத்தும் ஆவணப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வரலாற்று ஆய்வாளர்கள் விரும்புகின்றனர் என்றார்.