கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தநிலையில் கடந்த ஆண்டு மத்திய பகுதிகளில் தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது இதனடிப்படையில் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை கருத்துக்கணிப்புகளை நடத்தியது. பெற்றோர்களிடம் இருந்து பெற்ற கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்ற முடிவை தமிழக அரசு எடுத்திருந்தது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாத தொடக்கத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மீண்டும் தளர்வுகளற்ற முழு முடக்கம் அமலானதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தமிழ்நாடு முழுவதும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை பள்ளியில் நடத்த உத்தரவிட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 1,600 பள்ளிகள் உள்ளன. இதில் 545 பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 741 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு 50 சதவீத மாணவா்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வகுப்புகள் நடந்து வந்தன. 




மேலும், அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் முக கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு ஆசிரியர்கள் வரவேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, வகுப்பறைகளில் மாணவர்கள் இடையே போதிய இடைவெளியுடன் அமர வைப்பது, மதிய உணவு நேரத்தில் கூட்டாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்ப்பது என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 


இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.   குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி பகுதியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 4 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து இன்று முதல் 3 நாட்கள் பள்ளி மூடப்பட்டது.



மேலும் திருவண்ணாமலை மாவட்டம், படவேடு பகுதியில் உள்ள அனந்தபுரம் அரசு மேல் நிலை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் கீக்களுர் உயர்நிலைபள்ளியில் பயிலும் மாணவர் மற்றும் கடலாடி மேல் நிலைபள்ளியில் மேலும் இரண்டு ஆசிரியர்கள் என 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவர் இன்று இதுவரை 5 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட அனைவரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். எனவும் பின்னர் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் துப்பரவு பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தபட்டு வருகின்றது என்றும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருடைய நெருங்கி பழகியவர்கள் அனைவரிடமும் பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.