தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி 9 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உத்தரவிட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக கடலாடியில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவருக்கு  கொரோனா  வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனையடுத்து அவரை திருவண்ணாமலை மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர் பின்னர் அவரது வீட்டில் உள்ள 5 நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில் அவரது குடும்பத்தினர் 5 நபர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்ததும் தெரியவந்தது




 


மேலும் தொற்று பாதித்த ஆசிரியர் வேலை செய்யும் பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் மாணவர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.  இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்  15 நாட்களுக்கு ஒரு முறை ஆசிரியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கூறியிருப்பதாவது:-


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாணவர்களும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்றால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் கண்டிப்பாக தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்வதை முதன்மைக்கல்வி அதிகாரிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். 




பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணியினை அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களும் தவறாமல் கண்காணித்து ஒவ்வொரு 15 நாட்களுக்கும் தவறாமல் முதன்மை கல்வி அலுவலர் மூலம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டு உள்ள  அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பள்ளிகளை கண்காணித்து இது குறித்து அறிக்கையினையும் அளிக்க வேண்டும் என்றும் கொரோனா பரிசோதனை செய்யாமல் பள்ளிக்கு அசிரியர்கள் வந்தால் பள்ளியில் அனுமதிக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.