கர்நாடக மாநிலத்தில் உருவகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே 1956ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. சாத்தனூர் அணையில் தேக்கப்படும் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கனஅடி. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக எல்லையில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.


 




 


கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு நேற்று 1915 கன அடி வீதம் வந்து கொண்டிருந்தது. தற்போது காலை நிலவரப்படி சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 190 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சில நாட்களாக தண்ணீர் வரத்து இல்லாததால் நீர்மட்டம் உயராமல் இருந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் நேற்று முன்தினம் முதல் அணைக்கு நீர்வரத்து தொடங்கியது. இதனால் நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 113 அடியாக இருந்தது , தற்போது காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 116 .05 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கிருஷ்ணகிரி அணையிலிருந்து சாத்தனூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதே நிலையில் தொடர்ந்து தண்ணீர் வருகை தந்தால் இன்னும் ஓரிரு நாளில் அணையின் முழு கொள்ளளவான 119 அடி எட்டி விடும். அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது இருப்பதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் சுமார் 50,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் பாதுகாப்பு கருதி தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 2210 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் எக்காரணத்தைக் கொண்டும் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நீர்வரத்து குறித்து 24 மணி நேர கண்காணிப்பில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.