வேலூர் மத்திய சிறையில்  இருந்து மூன்று நாட்கள்  பரோலில் வந்த கொலைத் தண்டனை கைதி மாயாமாகியுள்ளார் . இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் பாகாயம் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்  .


வேலூர் விருபாட்சிபுரம் வாணியகுளம் , பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (27) . இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் , ஆடு மாடு மேய்த்துக் கொண்டு இருந்த மூதாட்டியை , அவர் அணிந்திருந்த நகைகளுக்கு ஆசைப்பட்டு கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார்  . 




 


இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பாகாயம் போலீஸார் பின்பு வேல்முருகன்  கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்மீது மீது கொலைவழக்கு பதிந்து புதுக்கோட்டை சிறையில்  அடைத்தனர் . பின்பு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வேல்முருகன் , கடந்த 2017 ஆம் ஆண்டு  வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப் பெற்று தண்டனை அனுபவித்து வருகிறார் .


 இந்நிலையில் தனது தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மூன்று நாட்கள் பொது விடுமுறைக்கு  விண்ணப்பித்திருந்த வேல்முருகனுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கள் மாலை வரை மூன்று நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டது  .




இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேலூர் மத்திய சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்ட வேல்முருகன் நேற்று , திங்கள் மாலை மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு திரும்பி இருக்க வேண்டும் . ஆனால்   நேற்று இரவு வரை வேல்முருகன் சிறைக்கு திரும்பாததால் , வேலூர் சிறை  துறை நிர்வாகம் சார்பில் இன்று காலை பாகாயம் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது . 


சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள புகாரில்  , மூன்று நாட்கள் பொது விடுமுறையில் சென்ற வேல்முருகன் மாயமாகியுள்ளதால் அவரை கண்டுபிடித்து மீண்டும் சிறை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர் .


 




 


மேலும் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடைய பேசிய , வேலூர் சிறை துறை அதிகாரிகள் , பொது விடுமுறையில்  சென்று தற்பொழுது மாயமாகியுள்ள வேல்முருகன் , ஏற்கனவே பலமுறை பரோலில் வீடு  சென்று உரிய நேரத்தில் சிறைக்கு  திரும்பியுள்ளார் . நேற்று மாலையும்  , தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட தாயை சந்தித்துவிட்டு  சிறைக்கு செல்வதாக  தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துவிட்டு , வீட்டில் இருந்து கிளம்பிய நிலையில் ,  வேல்முருகன் மாயமாகியிருப்பது பெரும் சந்தித்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது .


எனவே அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர் .


மருதமலை படத்தில் கைதி ஒருவரை வடிவேலு பரோலில் அழைத்துச் செல்வார். தாயை காணச் செல்லும் அந்த கைதி, அங்கிருந்து கம்பி நீட்டுவார். அது போன்று தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது.