வேலூர் : வேப்பமரத்தில் வடிந்த  பால்.. அம்மன் பிரசாதம் என்று குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் பரபரப்பு..!

வேப்பமரத்தில் இருந்து வழிந்த இனிப்பான பால் அம்மனின் பிரசாதம் என்ற நம்பிக்கையுடன் இருந்த வேலூரை சேர்ந்த தாவரவியல் பேராசிரியர் ஒருவர், இந்த சம்பவத்திற்கு  அறிவியல்பூர்வமாக வேறு விளக்கத்தை தந்துள்ளார்.

Continues below advertisement

இந்து மத நம்பிக்கைகளின்படி ஆடிமாதம் என்பது உலகையே காக்கும் சிவபெருமானுக்கே சக்தியை வழங்கும் அம்பாளுக்கு உகந்த மாதம் என்பதால், ஆடி மாதம் முழுவதும், அம்மனுக்கு திருவிழா எடுத்து வழிபட்டால் , தீய சக்திகள் , பஞ்சம் மக்களை நெருங்காது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் ஆடி மாதத்தில் திருமணம் , திருமண நிச்சயதார்த்தம் , புதுமனை புகுவிழா உள்ளிட்ட சுப காரியங்கள் செய்தால் அம்மனின் கோவத்திற்கு ஆளாகிவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது .

Continues below advertisement


 இப்படி 'ஆடிமாதம் என்றாலே அம்மனின் மாதம்' என்று சொல்லும் அளவுக்கு , அம்மன் கோவில்களில் , கூழ் ஊற்றுவது , தீ மிதிப்பது போன்ற கொண்டாட்டங்கள் அதிகளவில் காணப்படும் . இந்த மாதத்தில்  நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளையும் , அம்மனுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது , மக்களின் வழக்கமாகவே உள்ளது. இதுபோலவே , நேற்று மாலை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பஜார் பகுதியில் அமைந்திருக்கும் , கிராம நிர்வாக அலுவலகத்தின் எதிரே 25 ஆதி உயரமுள்ள ஒரு வேப்பமரத்தில் நிகழ்ந்த விஷயத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் , இங்குள்ள வேப்பமரத்தின் அடியில் நின்று பேசிக்கொண்டு இருந்தபோது , வேப்பமரத்தில்  இருந்து திடீரென்று வெள்ளை நிறத்தில் பால் போன்ற ஒரு திரவம் அவர்கள் மேல் சொட்ட ஆரம்பித்துள்ளது .


அங்கு இருந்தவர்கள் அதனை உற்று கவனித்தபொழுது , வேப்பமர உச்சியில் இருந்த ஒரு கிளையில் இருந்து , இனிப்பு  தன்மை வாய்ந்த பால் கொட்டுவதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர் . பிறகு அந்த மரத்தில் அம்மன் இறங்கி இருப்பதாகவும் , இறங்கிய அம்மன் தனது பக்தர்களுக்கு , பிரசாதமாக இந்த இனிப்பான பாலை வழங்குவதாகவும் கருதிய பொது மக்கள் , மரத்தின் அடியில் மூன்று செங்கலை வைத்து அதற்கு மஞ்சள் , குங்குமம் தடவி சூடம் ஏற்றி  வழிபட்டனர். பின்பு சொட்டு சொட்டாக வழிந்த பாலை பிரசாதம் என கருதி ,தங்கள் கைகளில் பிடித்து அவர்களது வீட்டுக்கு எடுத்து சென்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கவே , சம்பவம் அறிந்து அங்கு வந்த அணைக்கட்டு போலீசார் கொரோனா காலகட்டம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் சேராமல் அப்புறப்படுத்தினர். இதனால் பக்தர்களுக்கும் போலீசாருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது .


வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்?

இந்த பகுதியில் இருக்கும் மக்கள் , வேப்பமரத்தில் இருந்து வழிந்த இனிப்பான பால் அம்மனின் பிரசாதம் என்று நம்பிக்கையில் இருக்க வேலூரை சேர்ந்த தாவரவியல் பேராசிரியர் ஒருவர் இந்த சம்பவத்திற்கு  அறிவியல் பூர்வமாக வேறு விளக்கத்தை தந்துள்ளார். 'பொதுவாக வேப்பமரத்தில் உள்ள மாவுச்சத்தை , வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும் . இந்த நேரத்தில்  வேப்பமரத்தின் வேர்களுக்கு அதிகப்படியான தண்ணீர் கிடைத்தால், தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப் பட்டையின் அடியிலுள்ள திசு பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து , மரத்தின் பட்டைகளை பிளந்துகொண்டு  இனிப்புப் பால் போன்று வடியும்.

மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் போன்ற திரவியம் வடிவது நின்றுபோகும். இது வேப்பமரத்தின் இயல்பான தன்மைதான் , அம்மன் இறங்கியுள்ளார் என்பதெல்லாம் மக்களின் நம்பிக்கை மட்டுமே" என்று தெரிவித்தார் .

Continues below advertisement
Sponsored Links by Taboola