அரசின் தடையை மீறி ஏற்கனவே திட்டமிட்ட படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க உள்ளதாகவும் மேலும் வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதியன்று இந்துக்களுக்கு  எதிராக தொடர்ந்து ஒருதலை பட்சமாகச் செயல்பட்டுவரும்  திமுக அரசுக்கு நல்ல மனமாற்றத்தை
  வழங்கும்படி வேலூர் மாவட்டத்தில் இருக்கும் அணைத்து இந்து கோவில்களிலும் நூதன முறையில் வழிபாடு செய்யவுள்ளதாகவும் இந்து மக்கள் கட்சியின் வேலூர் கோட்ட தலைவர் கோ. மகேஷ் இன்று ABP செய்தி குழுமத்திடம் தெரிவித்துள்ளார் . 

 


வரும் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழி படுவதற்கும், மேலும் பொது இடங்களில் வைக்கப் பட்ட சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்தது.

 



 

இது தொடர்பாக அவர் ABP செய்தி குழுமத்திடம் தெரிவிக்கையில், வேலூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் குறித்து இந்து முன்னணி கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வேலூர் அலமேலுமங்காபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்பொழுது இந்துக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான  விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10 ஆம்  தேதி கொண்டாடப்படுவதையொட்டி ,  தமிழ்நாடு முழுவதும் இந்து முன்னணி சார்பில் இந்த வருட விநாயகர் சதுர்த்தி விழாவை 5 நாட்கள் விழாவாகச் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதை நிர்வாகிகளிடம் தெரிவித்தோம்.



 


முன்னதாக வேலூர் மாவட்டத்தில் பொது மக்கள் வழிபாட்டிற்காக 500 விநாயகர் சிலைகளை வைப்பதற்கு  வேலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி அளிக்குமாறு மனு அழைத்திருந்தோம், ஆனால் அதற்கும் அதிகாரிகளிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கப்படவில்லை . 


 

மேலும் ஆளும்  திமுக அரசு  கொரோனா தொற்று பரவலைக் காரணம் காட்டி விநாயகர் சிலை ஊர்வலங்களுக்குத் தடை விதிக்க வாய்ப்புள்ளதை முன்னதாகவே யூகித்த நாங்கள்,  ஒருங்கிணைத்த வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று 1008 விநாயகர் சிலைகளை வைத்து அதை வரும் 12 ஆம் தேதி  விஜர்சன ஊர்வலம் நடத்தி வேலூரில் பொது இடங்களில் வைக்கப்படும் 500 கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை சதுப்பேரியில் கரைக்கவும் திட்டமிட்டிருந்தோம்.

 

வேலூரைப் போலவே, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய  மூன்று மாவட்டங்களிலும்  பொதுமக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்படவுள்ள  மொத்தம்  1008 விநாயகர் சிலைகளை  12 வேலூர் சதுப்பேரி உற்பட 12  இடங்களில் கரைக்க ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எனவே திட்டமிட்ட படி வரும் 12 ஆம் தேதி  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலிருந்து விநாயகர் விஜர்சன ஊர்வலத்தை தொடங்கவுள்ளோம். ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஊர்வலத்தைத் தொடங்கி வேலூர்  சதுப்பேரியில்  சிலைகளைக் கரைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம் .


 



 


தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து டாஸ்மாக் கடைகள், சினிமா திரையரங்கங்கள்,  தனியார் நிறுவனங்கள் அனைத்தும்  செயல்படுகின்றன. மேலும் முழு அளவில் போக்குவரத்து சேவைகளும்  தொடங்கப்பட்டுள்ளது.  ஆனால் விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு மட்டும்  தடை விதித்திருப்பது இந்துக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது, எனவே தமிழ் நாடு அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து விமர்சியாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற அரசு அனுமதி அளிக்க வேண்டும்.  இல்லையென்றால் அனைத்து தடைகளையும் மீறி நாங்கள்  திட்டமிட்டபடி விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோம் . இதற்கு எதிராக அரசு எடுக்கும் எந்தவொரு  நடவடிக்கையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம் . 

 

இதன் முதற்கட்டமாக வரும் வியாழக்கிழமை (நாளை மறுநாள்) வேலூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து இந்து கோவில்களிலும் தமிழ் நாடு அரசுக்கு ஒரு நல்ல மனமாற்றத்தைக் கொடுக்கும்படி முறையிட்டு நூதன வழிபாடுகளும் செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்று ABP நாடு செய்தி குழுமத்திடம் தெரிவித்தார்.