கடலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை அடுத்த 5வது கிலோ மீட்டர் தொலைவில் ஒன்றிய மத்திய அரசின் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சுங்கச்சாவடியை நோக்கி புறப்பட்டு (100 மீட்டர்) சென்றனர். அப்பொழுது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


 




செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில்; 


திருவண்ணாமலை இனாம் காரியந்தல் கிராமத்தில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி என்பது சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருப்பதாகவும், நான்கு வழி சாலைகளை அமைக்காமல் இருவழிச்சாலையாக இருக்கும் பொழுது சுங்கச்சாவடி அமைத்து ஒன்றிய அரசு கொள்ளையடித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். சுங்கச்சாவடி அமைப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் இருந்த பொழுதிலும் அனைத்து விதிமுறைகளையும் மீறி திருவண்ணாமலையில் சுங்கச்சாவடி அமைத்திருப்பதாக சுட்டிக்காட்டினார். சுங்கச்சாவடியை எடுப்பதற்காக பல கட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை எவ்வித பலனும் இல்லை என்றும், மாநில அரசு கூறுவதையும் ஒன்றிய அரசு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் இது தொடர்பாக தம்மை போல கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொழுது தமிழக அரசும், காவல் துறையும் தங்களை அடக்குவது நியாயம் தானா? என்று கேள்வி எழுப்பினார். திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் அதேபோல 20 சதுர கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொதுமக்களுக்கு இலவசமாக சுங்கச்சாவடியில் அனுமதி வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்தவர்.




பொதுமக்கள் நீர்நிலை புறம்போக்கில் குடிசை வீடு கட்டினால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்றம் செய்து விடுகிறது. ஆனால் ஒன்றிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி அலுவலகத்தை மாவட்ட நிர்வாகம் நீக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து ஆளுநர் செய்வது அராஜகமான செயல் என்றும் ஜனநாயகத்திற்கு விரோதம் என்றும் தெரிவித்தார். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இதுவரை 44 பேர் உயிர் இழந்ததுடன் பல ஆயிரம் கோடி ரூபாய் இழந்துள்ளதை சுட்டிக்காட்டினார். தங்களது சொத்தையும் இழந்து, குடும்பத்தையும் இழந்து, நடுவீதியில் நின்று இருப்பதை சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றிய பொழுதும் அதனை ஆளுநர் நிராகரித்திருப்பது, தொடர்ந்து விளக்கம் கேட்கும் தமிழக ஆளுநர் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் நடத்தும் கம்பெனிகளின் கூட்டாளியாக செயல்படுகிறார் என பகிரங்கமாக குற்றச்சாட்டினார்.