திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் நேற்று மாலை மாவட்ட தி.மு.க. சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு, கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தலைமை தாங்கினார்.


சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு கட்சி மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.


 




அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின்; 


தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியின் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகளாகிய நீங்கள் தான் தலைவர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் பிரதிநிதிகள் என்றார். தமிழக முதல்வர் தினமும் பல்வேறு திட்டங்களை வகுத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். தற்போது வரையில் 50 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோர்.


தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய்1000 வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். சொன்னது போல் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோல் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும் என்றார். அதையும் செய்து காண்பித்து உள்ளார். இது பெண்களுக்கான ஆட்சி, மக்களுக்கான ஆட்சி. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து நடைபெற்ற 4 தேர்தல்களிலும் திமுக கட்சிக்கு தொடர் வெற்றி கிடைத்து வருகிறது.


 




 


4 தேர்தல்களிலும் திமுக தலைவர் மற்றும் வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் மக்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். 10 ஆண்டு காலமாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை நடத்தியவர் தலைவர் ஸ்டாலின் தான். நான் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை மனுக்களை அளிக்கின்றனர்.


திமுக ஆட்சியில் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை வைத்து உள்ளனர். அதனால் நம்மை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர். முதல்வரின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்று சேர உள்ளாட்சி பிரதிநிதிகளால் மட்டுமே முடியும். வருகிற நாடாளுமன்ற தேர்தல் வெற்றி உள்ளாட்சி பிரதிநிதிகளின் கையில் தான் உள்ளது. முதல்வர் சாதனைகளையும், திட்டங்களையும் மக்களிடம் நீங்கள் தான் கொண்டு செல்ல வேண்டும். இதை வைத்து தான் மக்கள் வருகிற தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 2019 மற்றும் 2021 தேர்தலில் எப்படி வெற்றி கூட்டணியை முதல்வர் அமைத்தரோ அதைவிட பலமான வெற்றி கூட்டணியை அமைப்பார்.


 




 அதிமுக 10 வருடம் தமிழகத்தை ஆண்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக இருந்தார். அதன் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தலைவர் ஸ்டாலின் தான். இதற்கு நடுவில் இருந்தவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கிடையாது. அவர்கள் 6 லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்துவிட்டு சென்று விட்டார். இவ்வளவு கடன் சுமையிலும் தலைவர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னது மட்டுமின்றி சொல்லாததையும் செய்து வருகிறார். கட்சியின் மூத்த முன்னோடிகளை பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் ஆகியோரின் உருவமாக பார்க்கிறேன். நீங்கள் தான் என்னையும், என்னை போன்ற இளைஞர்களை வழி நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


நிகழ்ச்சியில் 1000 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியும், 100 மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி, 3 பேருக்கு சக்கர ஸ்கூட்டர், 200 பேருக்கு தையல் எந்திரம், 200 பேருக்கு இஸ்திரி பெட்டி, 10 விவசாயிகளுக்கு பூச்சி மருந்து தெளிப்பான் போன்றவை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.