தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தொண்டர் ஒருவர் மயங்கிவிழுந்து இறந்த சம்பவம் திமுக கட்சியினரிடையே பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மேலும் மறைந்த திமுக நிர்வாகிக்கு , அமைச்சர் , சட்டமன்ற உறுப்பினர்கள் உட்படப் பல கட்சி நிர்வாகிகள்  , மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பக்காலப்பல்லி கிராமத்தில் பேரணாம்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து, பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை ஒன்றிய செயலாளர் பொகளூர் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குத் தமிழ் நாடு  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் . காந்தி , சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், அமலு, வில்வநாதன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டு ஆலசோனை நடத்தினர்.






இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேரணாம்பட்டு அருகே உள்ள மசிகம் கிராமம் எம்.ஜி.ஆர் . நகரைச் சேர்ந்த தி.மு.க. கிளை பிரதிநிதி சவுந்தர் (50) என்பவரும் கலந்துகொண்டார். கூட்டம் நடந்து கொண்டிருந்த போது சவுந்தர் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறினார்.


சிறிது  கூட்ட நெரிசலுடன் காணப்பட்டதால் கட்சி நிர்வாகிகள் அவரை அவர் அமர்ந்திருந்த இருக்கையோடு வெளியில் தூக்கிச் சென்று  அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து முதலுதவி அளிக்க முயற்சி செய்தனர். எனினும் அவரிடமிருந்து எந்த அசைவும் காணப்படாமல் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த நிர்வாகிகள் அவரை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.


ஆனால் அங்கு சௌந்தரை பரிசோதித்த  மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர் . இதனால்  அதிர்ச்சியில் ஆழ்ந்த திமுக கட்சி நிர்வாகிகள் அவரது குடும்பத்தார்க்குத் தகவல் தெரிவித்துவிட்டு , சௌந்தரின் இறந்த உடலை அவரது வீட்டிற்குக் கொண்டு சென்றனர்.



இச்சம்பவம் தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த அமைச்சர் காந்தி, மாவட்டச் செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனடியாக இறந்த சவுந்தர் வீட்டிற்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது மனைவி சுமதி, மகள் செண்பகத்திற்கு ஆறுதல் கூறினர்.


அப்போது, எம்.எல்.ஏ.க்கள் அமலு, வில்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், ஆகியோர் உடனிருந்தனர். ஆலசோனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த திமுக கட்சி தொண்டர் , ஆலசோனை கூட்டத்திலே உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் சோகத்தையும் , அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.


 


மேலும் படிக்க : வேலூர் : சி.எம்.சி மருத்துவமனையில் தொடங்கியது தடுப்பூசிகளை கலந்து செலுத்தி ஆய்வு செய்யும் பணி..!


வேலூர் மாவட்ட செய்திகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் !!!