திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் பேசிய போது;  திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக 12 தாலுகாக்களுக்கும் துணை துணை ஆட்சியர்கள், 12 நியமன அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் தலைமையில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு குழு, தேடுதல் மற்றும் மீட்பு குழு, வெளியேற்றக் குழு மற்றும் நிவாரண மையம், தங்குமிடம் மேலாண்மை குழு ஆகிய 4 குழுக்கள் மற்றும் 4 நகராட்சிகளுக்கும் நகராட்சி ஆணையர்களை நியமன அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


 






திருவண்ணாமலை மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாக பருவமழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் தொடர்பாக பொது மக்கள் தங்கள் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான தங்களின் சந்தேகங்களை, மழை வெள்ளகாலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு கட்டணமில்லா தொலைபேசிஎண் - 1077, மற்றும் 04175-232377 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், திருவண்ணாமலை தாலுகாவை தவிர மற்ற தாலுகாக்களில் வசிப்பவர்கள் தொலைபேசி எண். 04175-1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றும், மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பழைய பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களை தொடர் மழையின் போது பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.


 




 


கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நிவாரண மையத்தில் தங்குவது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக அவர்களை நிவாரண மையங்களுக்கு கொண்டு சென்று தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பொது மக்கள் மழை வெள்ள காலத்தில் சுவர் இடிந்து விழுந்து ஏற்படும் மனித உயிரிழப்புகளை தவிர்க்க மழைக்காலத்தில் பாதுகாப்பான இடத்தில் தங்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மாவட்டத்தில் 96 நீர்நிலைகள் முழுவதும் நிரம்பிய நிலையில் நீர் தேக்கம் மற்றும் அணைகளை கனமழை பெய்யும் காலங்களில் அவ்வப்போது நீர்தேக்க அளவினை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார்.


 




 


மேலும் பொதுமக்கள் பாதுகாப்பற்ற முறையில் அங்கு சென்று புகைப்படம் எடுப்பது, குளிப்பது மற்றும் சிறுவர்கள் அப்பகுதிகளில் சென்று விளையாடுவது போன்ற செயல்பாடுகளின் போது கவனக்குறைவால் நீரில் மூழ்கி மனித உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலையும் உள்ளது. எனவே பொதுமக்கள் அப்பகுதிகளுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளில் மற்றும் நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை சம்பந்தப்பட்ட துறையின் மூலமாக உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று இவ்வாறு பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, ஆட்சியர் நேர்முக உதவியாளர்கள் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.