திருவண்ணாமலையில் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் பேட்டியளிக்கையில், கர்நாடக மாநிலத்தில் 2017-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு மத்திய அரசால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு தமிழகத்துக்கு சீரான 177 டிஎம்சி காவேரி நீர் வந்து கொண்டிருந்தது. இரு மாநிலங்களுக்கும் இடையே இருந்த பல ஆண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையே சாரும். கடந்த 2021 ஜூன் மாதம் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட முடியாது என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சாம்பல் வெளிப்படையாக அறிவித்தார். இப்போது காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மேகதாது அணை கட்டத் தீவிரம் காட்டி வருகிறது.


 




 


காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியிலேயே மேகதாது அணை கட்ட ஒன்பதாயிரம் கோடி ஒதுக்குவோம் என்று அறிவித்திருந்தார்கள். காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக அதை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 1970-ஆம் ஆண்டுகளில் கர்நாடகாவில் காவிரி நதியின் குறுக்கே கபினி, ஹேமாவதி, ஹரங்கி, ஸ்வர்ணவதி ஆகிய நான்கு அணைகள் கட்டிய பொழுது அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி எப்படி கண்முடி மௌனம் சாதித்தாரோ, அதேபோல் தற்பொழுது மேகதாது அணை கட்ட எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கும் மு.க. ஸ்டாலின் கர்நாடகாவுக்கு சென்று காங்கிரஸ் கட்சியுடன் நட்பு பாராட்டி கொண்டிருக்கிறார். கர்நாடகாவில் பாஜக ஆட்சி காலம் முழுவதும் காவிரி நீர் எந்த பிரச்சனையும் இல்லாமல் தமிழகத்திற்கான பங்கு வந்துகொண்டு இருந்தது.


 




 


ஆனால் காங்கிரஸ் ஆட்சி வந்த உடனே இந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் போதிய மழை இல்லை என்று மழுப்பலான காரணம் சொல்லி காவிரி தண்ணீர் தர மறுத்திருக்கிறது கர்நாடகா அரசு. ஆனால் இதற்கும் மு.க. ஸ்டாலின் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, 1974-ஆம் ஆண்டு காவிரி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் புதுப்பிக்காமல் தமிழகத்தை கருணாநிதி வஞ்சித்ததை போல் அவர் மகன் ஸ்டாலின் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.


கோட்ட அமைப்பு பொதுச்செயலாளர் குணசேகரன் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஆர். பாலசுப்பிரமணியன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் சி. ஏழுமலை தெற்கு மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் மாநில உள்ளாட்சி பிரிவு செயலாளர் அறவாழி உட்பட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.