திருவண்ணாமலை கிரிவலப்பாதை வேங்கிக்கால் பகுதி பிரியும் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அண்ணா நுழைவு வாயில் மற்றும் கருணாநிதி சிலையை வருகிற 8-ந் தேதி மாலை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிலையில் இன்று இதனை பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நேரில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து எச். ராஜா பேசுகையில், திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதையில் கருணாநிதி சிலை வைப்பது இந்துக்களை அவமானப்படுத்துகிற செயல். எனவே, எல்லா ஆன்மிக சக்திகளையும் இணைத்து இதற்கு எதிராக பலவித போராட்டங்கள் நடத்தப்படும். சிலை வைக்கப்பட்டு உள்ள இடம் 92 அடி நத்தம் பட்டா ஆகும். ஆனால் ஆரம்பத்தில் 250 அடிக்கு பட்டா இருப்பதாக கொடுத்தனர். பிறகு நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மீண்டும் 92 அடியாக மாற்றப்பட்டு உள்ளது.


 




250 அடியாக மாற்றிய அந்த அதிகாரி ஏன் கைது செய்யப்படவில்லை?. அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அண்ணாமலையார் நுழைவு வாயில் அண்ணாமலையாருக்கு சொந்தமான ஊரில் அண்ணாவின் பெயரில் ஏன் நுழைவு வாயில். எனவே இதை அண்ணாமலையார் நுழைவு வாயில் என்று உடனடியாக மாற்ற வேண்டும். கிரிவலப்பாதை முழுவதும் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து வணிக வளாகங்கள், கடைகள் கட்டப்பட்டிருக்கிறது. வருகிற பௌர்ணமி கிரிவலம் நடப்பதற்குள் கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து கோவில் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும்” என்றார். செய்தியாளர்கள் ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் நாத்திகரான கருணாநிதி தான் என கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த எச். ராஜா நீங்கள் அறிவாலயத்து செய்தியாளரா? என விமர்சனம் செய்து செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்


 




மேலும், “எங்கள் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு அமோகமாக வெற்றி பெறுவார். அவருக்கு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடாது. ஒற்றை தலைமையா?, இரட்டை தலைமையா? என்பதை அ.தி.மு.க.வினர் தான் முடிவு செய்வார்கள்”  என்று கூறினார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகே உள்ள சிவான்ஜி குளத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலின் இடம் ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை குறித்து கோவிலை பார்வையிட்டார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண