16 வயது சிறுமியைத் திருமணம் செய்து வைக்குமாறு , சிறுமியின் பெற்றோருக்குக் கொலைமிரட்டல் விடுத்த குடியாத்தம் நகர அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணைத் தலைவர் போக்சோ சட்டத்தில் கைது , கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை வெளியிட்டனர். 

வேலூர் மாவட்டம் குடியாத்தம், புதுப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த கௌதம் (27). இவர் குடியாத்தம் நகர அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின்
  துணைத் தலைவராக இருந்து வந்தார் . மேலும் கௌதமும் அதே பகுதியைச் சேர்ந்த , 16 வயது நிரம்பிய , 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மனைவியும் , ஒருவரை ஒருவர் , கடந்த ஒரு வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர் . 



 

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் , இவர்களது காதலுக்கு , சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .  மேலும் சிறுமியின் பெற்றோர் அவரை கண்டித்ததால் , கடந்த ஒரு மாதமாக அந்த சிறுமி , கௌதமிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார் .

 

இதனால் ஆத்திரம் அடைந்த கௌதம் , சிறுமியிடம் , தாங்கள் காதலிக்கும் பொழுது ஒன்றாகச் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை , பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார் .

 

சிறுமி இதனை அவரது பெற்றோர்களிடம் தெரிவிக்கவே , சிறுமியின் பெற்றோர் , குடியாத்தம் பகுதி திமுக நிர்வாகி மற்றும் அவர்களது உறவினருமான  சௌந்தராஜனிடம் முறையிட்டுள்ளனர் .



 

சௌந்தராஜன் , கௌதமை  கூப்பிட்டுக் கண்டித்தபொழுது , கவுதம் சிறுமியை தனக்குக் திருமணம்  செய்து வைக்கும்படி கூறியுள்ளார் , மேலும் இதற்கு மறுப்புத் தெரிவித்தால்  ,அந்த சிறுமியைக் கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வேன் என்று அச்சுறுத்தியுள்ளார் .

 

இதனால் பதற்றமடைந்த , சிறுமியின் பெற்றோர் , திமுக பிரமுகர் சௌந்தர்ராஜன் உதவியுடன் , நேற்று குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .

 

புகாரை விசாரித்த , உதவி ஆய்வாளர் காஞ்சனா , குற்றவாளி கௌதம் மீது , 16 வயது சிறுமியைத் திருமணம் செய்துகொடுக்குமாறு வற்புறுத்தியது  , கொலை மிரட்டல் விடுத்தது , மற்றும் சமூகவலைத்தளங்களில் சிறுமியின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்வேன்  என்று அச்சுறுத்திய குற்றங்களுக்காக , அவர் மீது போக்சோ உள்ளிட்ட  4  பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து  , குற்றவாளி கௌதம் என்பவரை போலீசார் கைது செய்தனர் .

 

மேலும் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்ததாக அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் , கௌதமை அதிமுக கட்சியின் தகவல்தொழில்நுட்ப பிரிவு பதவியிலிருந்து நீக்கியதோடு இல்லாமல் அவரை அதிமுக கட்சியின்  அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவித்து  கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.

 

 





 

 போக்சோ சட்டத்தில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .