தமிழ்நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழா முக்கியமானது ஆகும். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டுமே விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி விழா கடந்த சில ஆண்டுகளாக சிறிய கிராமங்களிலும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவில் ஊரின் முக்கிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்வர். பின்னர் குறிப்பிட்ட நாளில் அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளில் விழா குழுவினர் மற்றும் இந்து அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் மண் சிற்பங்களுக்கு பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம், கொண்டையம் பேட்டை பகுதியில் சதுர்த்தி விழாவிற்கான விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 




மேலும், கொண்டையம் பேட்டை பகுதியில் மண்பாண்டங்கள் மற்றும் சிற்பங்கள் செய்யும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா நெருங்குவதால் தற்போது மண்ணால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் உருவாக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் ரசாயன கலவைகள் சேர்க்காமல் இயற்கையான முறையில் அரசு விதிகளுக்கு உட்பட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வலம்புரி விநாயகர், பஞ்சமுக விநாயகர், பாலகணபதி, மங்கள விநாயகர், சிங்க வாகன விநாயகர், சித்தி விநாயகர் என பலவிதமான வடிவங்களில் கலை நுணுக்கத்துடன் சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. இப்பகுதியில் செய்யப்படும் மண்பாண்டங்கள் மற்றும் சிற்பங்கள் பிரசித்தி பெற்றவை என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் சிலை செய்ய ஆர்டர் கொடுத்து சென்று உள்ளனர்.




மேலும், இதுகுறித்து விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் மணிகண்டன் கூறுகையில், “பல தலைமுறைகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஆன்மிக பணி என்பதாலும், பொதுமக்கள் வணங்கும் தெய்வத்தின் சிலையை வடிவமைப்பதாலும் கடின வேலை என்ற போதும் ஆத்ம திருப்தி உள்ளது. 2 அடி முதல் 15 அடிவரை சிலைகள் செய்யப்படுகின்றன. ரூ.1,000 முதல் ரூ.30 ஆயிரம் வரை சிலைகள் விற்கப்படுகின்றது. முற்றிலும் களிமண்ணை பயன்படுத்தி நீர்நிலைகளை மாசுப்படுத்தாத வண்ணம் சிலைகள் செய்யப்படுகின்றது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிலைகள் அதிகம் விற்பனை ஆகும் என எதிர்பார்த்து உள்ளோம். மேலும் தமிழ்நாடு அரசு கைவினை தொழிலாளர்களுக்கு மானியம், வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வழங்க உதவி புரிய வேண்டும் . ஏன் என்றால் காலப்போக்கில் இந்த தொழில் அழியும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகையால் தமிழ்நாடு அரசு இந்த தொழில் அழியாமல் காக்க முன் வரவேண்டும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 வகையான சிலைகளை தயாரித்து உள்ளோம்” என்று தெரிவித்தனர்.