அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்த பிரதமர் மோடி கடந்த மாதம் 6 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். இவற்றில் 25 ரயில் நிலையங்கள் தெற்கு ரயில்வேக்கு உட்பட்டவை. இந்த நிலையங்கள் ரூ.616 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில், ரயில் நிலையங்களை மேம்படுத்த அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், மொத்தம் 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470 கோடி செலவில் மேம்படுத்தப்படுகின்றது.


மேலும் இந்த திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் உள்ள 25 ரயில் நிலையங்கள், ரூ.616 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 18 நிலையங்களும், கேரள மாநிலத்தில் 5, கர்நாடகா, புதுச்சேரியில் தலா ஒரு நிலையமும் மேம்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 62 நிலையங்கள், கேரளாவில் 27 நிலையங்கள், புதுச்சேரியில் 2 நிலையங்கள், கர்நாடகா, ஆந்திராவில் தலா ஒரு நிலையம் என மொத்தம் 93 நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.




இந்நிலையில், திருச்சி தெற்கு ரெயில்வே கோட்டத்தில் 15 ரெயில் நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் அமிர்த் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.6.18 கோடியில் புனரமைக்கப்படுகிறது. இதில் ரெயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த தற்போது உள்ள ரெயில் நிலையத்தை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன. ரெயில் நிலைய நுழைவு வாயில், பயணிகள் காத்திருப்பு அறை, நவீனமயமாக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள், டிக்கெட் கவுண்ட்டர்கள் போன்றவை புதுப்பிக்கப்படும். ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தின் சுற்றுப்புற பகுதிகளில் தூய்மை படுத்தி அபிவிருத்தி செய்யப்பட்டு ரெயில் நிலையம் முகப்பு தோற்றம் அழகாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டு, தற்போதுள்ள முனைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு புதிய நுழைவு வாயில் கட்டப்படும். இதில் சிறப்பு அம்சமாக ரெயில் நிலைய முகப்பு தோற்றத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாதிரி வடிவம் உருவாக்கப்படுகிறது.


மேலும் ரெயில் நிலையம் முன்பு செல்பி பாயிண்ட் அமைக்கப்படும். பயணிகளின் பயன்பாட்டிற்காக புதிய கழிவறைகள் கட்டப்படும். பயணிகள் பிளாட்பாரம், பெஞ்சுகள், கூடுதல் தண்ணீர் குழாய்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளது. ரெயில் பயணிகளின் வசதிக்காக கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் உருவாக்கப்படும்.


மேலும் இந்த திட்டம் மூலம் அனைத்து பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தெற்கு ரெயில்வே கவனம் செலுத்துகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படும் வகையில் ரெயில் நிலைய நுழைவு வாயிலில் நன்கு வடிவமைக்கப்பட்ட சரிவுகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் குறைந்த மின் சக்தியை பயன்படுத்தும் வகையில் ரெயில் நிலைய கட்டிடங்கள் முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்தப்படும். ஸ்ரீரங்கம் ரெயில் நிலைய கட்டிடம் நவீனமயமாக வடிவமைக்கப்படவுள்ளது. இந்த மாற்றம் இந்திய பன்முகத்தன்மையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும். மேலும் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் இன்னும் பல ஆண்டுகள் அழியாத அடையாளமாக இருக்கும்.