தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்). திருச்சி மண்டலத்தின் மூலம் பயணிகள் எளிதாக செல்ல அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படுகிறது. இதற்காக திருச்சியில் தற்காலிகமாக 3 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துநிலையங்கள் இன்று முதல் செயல்பட உள்ளது. இதில் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சோனா, மீனா தியேட்டர் அருகிலும், மதுரை மற்றும் புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் ரவுண்டானா அருகிலும் இருந்து புறப்படும். இங்கு இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் இயங்கும். திருச்சி மண்டல இயக்கப் பகுதிகளான லால்குடி, திருவெறும்பூர், மணப்பாறை, துவரங்குறிச்சி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதேபோல் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 23-ந்தேதி வரை சென்னை கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், பெரம்பலூர், துறையூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.




தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ஊர்களிலிருந்தும் அவரவர் ஊர்களுக்கு சென்று திரும்புவதற்கு தேவையான சிறப்பு பேருந்துகள் தினசரி இயக்கப்பட உள்ளது. அதன்படி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகளும், தஞ்சைக்கு 50 பேருந்துகளும், மதுரைக்கு 50 சிறப்பு பேருந்துகளும் ,கோவைக்கு 20 பேருந்துகளும், திருப்பூருக்கு 20 பேருந்துகளும், திண்டுக்கல் மற்றும் பழனிக்கு 25 சிறப்பு பேருந்துகளும், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்னைக்கு 50 சிறப்பு பேருந்துகளும், துறையூர் மற்றும் பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு 20 சிறப்பு பேருந்துகளும், இதேபோல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிக்கு 50 சிறப்பு பேருந்துகளும், பெரம்பலூருக்கு 25 சிறப்பு பேருந்துகளும், துறையூருக்கு 25 பேருந்துகளும் என மொத்தம் 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் tnstc.in என்ற இணையதளத்திலிருந்து ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.




மேலும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இருந்து சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட உள்ளது. மக்கள்  தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் இந்த பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட போக்குவரத்து துறை சார்பாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்நிலையில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்தால் உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளை மீறி தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.