திருச்சி மாநகர பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் அவர்களின் அதிரடி நடவடிக்கை மற்றும் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். திருச்சியில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநகர் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வியாபரம் செய்வது, சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமல் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட செயல்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதைத்தொடர்ந்து மாநகரில் செயல்படும் ஓட்டல்கள், டீ கடைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் வியாபாரிகள் வியாபாரம் செய்யும் போது அந்த கடைகளின் குப்பைகளை முறையாக குப்பைத் தொட்டி வைத்து மாநகராட்சி குப்பை வாகனங்கள் வரும் பொழுது எடுத்து கொட்டவேண்டும்.  அவ்வாறு செய்யாமல் குப்பைகளை கடைகளுக்கு முன்பாக வைத்திருத்தல், சாலைகளில் வீசுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், திருச்சி மாநகர் பகுதியில் தற்போது தூய்மை பணிகள் நல்ல முறையில் நடந்து வருகிறது. இன்று காலையில் உய்கக்கொண்டான் வாய்க்கால் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவில் நிகழ்ச்சிகளிலும் பொது மக்கள் கலந்து கொள்ளும் போது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக வீடு கட்டும் கழிவுகள், டீ கடைகளில், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வரும் குப்பைகளை சாலையில் ஏதாவது ஒரு மூலையில் கூட்டி வைத்திருந்தாலோ, அல்லது கொட்டி வைத்திருந்தாலோ அதை அதிகாரிகள் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டால் வியாபாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இதனை தொடர்ந்து வீடு கட்டும் கழிவுகளை சாலையோரம் பொது மக்களின் சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் கொட்டி வைத்தால் அதை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.




திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் பொது இடங்களில் முககவசம் அணிதல், கூட்டம் கூடுவதை தவிர்தல், சமூக இடைவெளியை கடைபிடிக்குபடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறோம் என தெரிவித்தார். குறிப்பாக கடைகள், டீ கடைகள், மாளிகை கடைகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் அரசின் விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். அரசின் கட்டுபாடுகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் எனவும் கூறினார். மேலும் மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.