திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் அவரது குடும்பங்களை பற்றி சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை பதிவிட்டு இருந்தனர். 


இந்நிலையில் தன்னையும் தனது குடும்பப் பெண்களையும் பற்றி இழிவாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் தெரிவித்தார். அடிப்படையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.


இதனைத் தொடர்ந்து சமூக வலைதலங்களில் தவறாக பதிவிட்டதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து இருந்தார்.


திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியது...


நான் காவல்துறை பணியின் மீது விருப்பப்பட்டு சேர்ந்தேன். மேலும் எனது 13 ஆண்டுகால IPS வாழ்க்கையில் எல்லா ஆண்டுகளிலும் Outstanding Rating மட்டுமே உயர் அதிகாரிகளிடம் இருந்து இதுவரை பெற்றுள்ளேன்.


நான் ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆகையால் காவல்துறை பணியில் சேர்ந்த பிறகு சாமானிய மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று முனைப்போடு செயலாற்றி வருகிறேன்.


இந்நிலையில் சமீபத்தில், ஒரு YouTuber பதிவு செய்த சர்ச்சையான அவதூறுகளால் Cyber Crime காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சட்ட அடிப்படையில் பணியாற்றியதற்காக, அந்த YouTuber சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் என்னை கடுமையாக (சில சாதி பெயர்களைக் குறிப்பிட்டு) சாடினார். அது விமர்சனைத்தையும் தாண்டி தீவிர அவதூறு கோணத்தில் இருந்தது.


எனவே, அதற்கு எதிராக Civil and Criminal Defamation Notice என் வழக்கறிஞர் மூலம் அந்த கட்சியின்  ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பினேன். 




பொது வாழ்வில் இருக்கும் எங்களுக்கு ஆபாச தாக்குதல்கள் ஒரு பொருட்டே அல்ல


நான் சட்டப்படி இந்த Notice அனுப்பிய ஒரே காரணத்திற்காக என்னை தாண்டி என் குடும்பத்தினர்கள், பெண்கள், குழந்தைகள் என என்னை சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் பரப்பினர். X தளத்தில் என் குழந்தைகள் மற்றும் என் குடும்ப பெண்களின் புகைப்படங்களும் தரம்தாழ்ந்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டது.


இது ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினருக்கே கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அச்சுறுத்தலாக உருமாறியது. 


இவ்வாறு தொடர்ந்து ஆபாச சித்தரப்பில் ஈடுபடும் இந்த கணக்குகளை ஆராயும் போது இவை அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரில் தொடங்கி மாநில பொறுப்பாளர்கள் வரை முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலால் இயக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.


ஏனெனில், இவை அனைத்தும் போலிக் கணக்குகளாகவும் தொடர்ந்து இதே வேலையைச் செய்து வருபவையாகவும் உள்ளன. அதிலும் பல போலி கணக்குகள் அந்த கட்சியின் தூண்டுதலின் காரணத்தினாலேயே வெளிநாடுகளில் வாழும் தமிழ் தெரிந்த நபர்களுக்கு பணம் கொடுத்து ஆபாச பதிவுகளை பதிவிட உத்தரவிட்டதாக தெரியவருகிறது.


நான் இந்த விசயத்தில் அளித்த 3 புகார்களில் 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு Cyber Crime Wing போலீசார் இதனை விசாரித்து வருகிறார்கள்.


பொது வாழ்வில் இருக்கும் எங்களுக்கு இதுபோன்ற தொடர் ஆபாச தாக்குதல்கள் ஒரு பொருட்டே அல்ல. என்ன தான் காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்தாலும் நாங்களும் சராசரி மனிதர்கள் தான். 




ஆகையால் நிஜவாழ்வில் பலரை எதிர்கொள்ளும் சூழலில் இந்த இணையக் கூலிப்படையை எதிர்கொள்வது எங்களுக்கு பொருட்டல்ல. ஆனால், ஒரு சராசரி குடும்ப நபராக இருந்து எனது குடும்பத்தின் மீது உள்ள அக்கறையில்  இந்த X இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும் எனது மனைவி விலக முடிவு செய்துள்ளோம்.


எங்களது இந்த முடிவு தற்காலிகமானது ஆகும்.  நாங்கள் பயத்தினாலோ, அருவருப்பினாலோ, மேற்கொள்ளவில்லை. போலிக் கணக்குகள் மூலம் பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் (Morphing) குழந்தைகளுக்குக் கொலை மிரட்டல் விடும் வக்கிர புத்தியும் கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் இதற்கு அவமானப்பட வேண்டும்.


என்னை நேரடியாகவோ சட்டரீதியாகவோ எதிர்கொள்ள முடியாத கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன்.


அதேநேரத்தில், ஒரு சாதாரண குடிமகனாக இணையத்தில் எழுந்துள்ள இதுபோன்ற கூலிப்படை தாக்குதலைக் கண்டு மிகவும் அக்கறையும், அறச்சீற்றமும் கொள்கிறேன். ஒரு மாவட்ட கண்காணிப்பாளராக உள்ள பெண்ணையே இவர்கள் இந்தளவிற்குத் தாக்குகிறார்கள் என்றால் சாதாரண மக்களையும், பெண்களையும் என்ன செய்வார்கள்?..


இன்றுவரை பதிவிட்ட எந்த ஆபாச பதிவுகளையும் நீக்கவில்லை, வருத்தம் தெரிவிக்கவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை எனும்போது இந்த கூட்டத்திற்குச் சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது. இது சம்பந்தமாக சைபர் கிரைமில் மூன்று குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் விசாரணையும், கைது நடவடிக்கையும் தொடரும். இதில் ஈடுபட்ட நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தருவது உறுதி. ஒரு குடும்ப நபராகவும் காவல் அதிகாரியாகவும் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் சமூக விரோத கும்பல்களின் செயற்பாட்டை முறியடிப்பது எனது கடமை.


இது போன்ற தாக்குதல்களுக்கு ஆளாகும் சாமானிய மக்கள் எந்தவித அச்சத்திற்கும் ஆட்படாமல் தானாக முன்வந்து புகார் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.




சீமான் மீது மானநஷ்ட வழக்கு- எஸ்.பி. வருண்குமார் 


ஆபாசம் மற்றும் அவதூறு பரப்பிய அனைத்து போலி கணக்குகளையும் அதன் பின் ஒளிந்து கொண்டு ஆபாசம் பரப்பும் விஷமிகளையும் அவர்களை கூலிக்காக தூண்டிவிடும் அந்த கட்சி பொறுப்பாளர்களையும் Tamil Nadu Prohibition of Harassment of Women Act 1998, Information Technology Act 2000, சட்டம் 2023 மற்றும் பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் 2023-ன் படி வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவேன் என்பதில் மிகவும் முனைப்புடன் இருக்கிறேன்.


இதுபோக இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொருப்பாளர்கள் மீது மானநஷ்ட வழக்கு (Civil & Criminal Defamation) தொடர உள்ளேன். எந்தவித சமரசமும் இன்றி இந்த சட்ட நடவடிக்கைகளை தொடரந்து மேற்கொள்வேன். இவ்வாறு தெரிவித்தார்.